Published : 06 Jun 2025 04:56 PM
Last Updated : 06 Jun 2025 04:56 PM
சென்னை: மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் கவிஞர் சல்மா ஆகியோர் தங்களது வேட்புமனுக்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (ஜூன் 6) தாக்கல் செய்தனர்.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக மாநிலங்களவை எம்பிக்கள் எம்.சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், பாமக எம்பி அன்புமணி, அதிமுக எம்பி சந்திரசேகரன், மதிமுக எம்பி வைகோ ஆகியோரின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. தமிழகத்தில் இருந்து 6 புதிய மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்ய ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் ஜூன் 2ம் தேதி தொடங்கியது.
இத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வழக்கறிஞர் பி.வில்சன், எஸ்.ஆர். சிவலிங்கம் மற்றும் ரொக்கையா மாலிக் (எ) கவிஞர் சல்மா ஆகியோர் தங்களது வேட்புமனுக்களை, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூன் 6) தாக்கல் செய்தனர். அப்போது, கங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், மமக தலைவர் ஜவாஹிருல்லா, விசிக தலைவர் திருமாவளவன், திமுக எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் உடனிருந்தனர்.
மாநிலங்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மநீம தலைவர் கமல்ஹாசன் தனது வேட்புமனுவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று தாக்கல் செய்தார். அதேபோல், அதிமுக சார்பில் போட்டியிடும், ஐ.எஸ்.இன்பதுரை மற்றும் ம.தனபால் ஆகியோரும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT