Last Updated : 06 Jun, 2025 04:07 PM

8  

Published : 06 Jun 2025 04:07 PM
Last Updated : 06 Jun 2025 04:07 PM

மதுரை முருக பக்தர்கள் மாநாடு: முருகன், ஐயப்பன், ஓம்சக்தி, சாய்பாபா பக்தர்கள் குழுக்களுக்கு பாஜக அழைப்பு

மதுரை: தமிழகம் முழுவதும் நகரம், கிராமங்களில் செயல்பட்டு வரும் முருகன், ஐயப்பன், ஓம்சக்தி, சாய்பாபா பக்தர்கள் குழுக்களை சந்தித்து மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு பாஜகவினர் அழைப்புவிடுத்து வருகின்றனர்.

மதுரையில் இந்து முன்னணி சார்பில் ஜூன் 22-ல் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மாநாட்டில் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திரா மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் மத்திய அமைச்சர்கள், பாஜக தேசிய நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளனர்.

மாநாட்டு அரங்கில் மாநாட்டுக்கு 6 நாட்களுக்கு முன்பே அறுபடை வீடுகளின் மாதிரிகள் அமைக்கப்பட்டு அந்தந்த வீடுகளில் அருள்பாலிப்பது போல் முருகன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்படுகிறது. இந்த 6 நாளும் அறுபடை வீடுகளின் மாதிரியை பார்வையிட வரும் பக்தர்களுக்கு பூஜைகள் செய்யப்பட்டு பிரசாதம் வழங்கி பக்தர்களின் வருகையை அதிகரிக்க தனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டை தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பயன்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இதை மனதில் வைத்து தமிழகம் முழுவதும் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முருக பக்தர்கள் மாநாடு தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்தக் கூட்டங்களில் முருக பக்தர்கள் மாநாட்டில் பாஜகவினர், இந்து இயக்கத்தினர் குடும்பத்துடன் பங்கேற்பதுடன், பொதுமக்களையும் கலந்துகொள்ள வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், முருக பக்தர்கள் மாநாட்டில் பாஜக மற்றும் இந்து இயக்கத்தினர் மட்டும் அல்லாமல் தமிழகத்தின் நகரம் மற்றும் கிராமங்களில் செயல்பட்டு வரும் பக்தர்கள் குழுக்களை சேர்ந்தவர்களையும் பங்கேற்க வைக்க கட்சியினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நகரம், கிராமங்களில் அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் கொண்ட பக்தி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. பெரும்பாலான இடங்களில் முருகன் பாதயாத்திரை குழுக்கள், ஐயப்ப பக்தர்கள் குழுக்கள், ஓம்சக்தி குழுக்கள், சாய்பாபா பக்தர்கள் குழுக்கள் உள்ளன. இந்த பக்தி குழுக்களின் முகவரியை சேகரித்து, அப்பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள் மூலம் குழுவினரை நேரில் சந்தித்து முருக பக்தர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கவும், அவர்களின் வருகையை உறுதிப்படுத்தவும் பாஜக நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து பாஜக நிர்வாகிகள் பக்தி குழுக்களை நேரில் சந்தித்து முருக பக்தர்கள் மாநாட்டுக்கு அழைத்து வருகின்றனர். இது குறித்து பாஜகவினர் கூறுகையில், “திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் குறுகிய கால இடைவெளியில் பல ஆயிரம் பேரை திரட்டி பழங்காநத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இதேபோல் முருக பக்தர்கள் மாநாடும் சிறப்பாக நடத்தப்படும். இந்த மாநாட்டில் முருக பக்தர்கள் மட்டுமில்லாமல் அனைத்து பக்தர்களையும் பங்கேற்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது,” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x