Published : 06 Jun 2025 03:04 PM
Last Updated : 06 Jun 2025 03:04 PM
சென்னை: மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஐ.எஸ்.இன்பதுரை மற்றும் ம.தனபால் ஆகியோர் தங்களது வேட்புமனுக்களை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று (ஜூன் 6) தாக்கல் செய்தனர்.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக மாநிலங்களவை எம்பிக்கள் எம்.சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், பாமக எம்பி அன்புமணி, அதிமுக எம்பி சந்திரசேகரன், மதிமுக எம்பி வைகோ ஆகியோரின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்தச் சூழலில் தமிழகத்தில் இருந்து 6 புதிய மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்ய ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்திருந்தது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் ஜூன் 2ம் தேதி தொடங்கியது.
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சார்பில் போட்டியிடும் நான்கு இடங்களில், மூன்று இடங்கள் திமுக வேட்பாளர்களுக்கும், ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டிருந்தது. அதிமுக சார்பில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் ம.தனபால், அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை போட்டியிடுவார்கள் என்று அறிவித்திருந்தது.
அதன்படி, தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூன் 6) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், ஐ.எஸ். இன்பதுரை மற்றும் ம.தனபால் ஆகியோர் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். அப்போது, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.வேலுமணி ஆகியோர் உடனிருந்தனர்.
மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய ஜூன் 9-ம் தேதி கடைசி நாளாகும். ஜூன் 10-ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களை வாபஸ் பெற ஜூன் 12-ம் தேதி கடைசி நாள் ஆகும். ஒருவேளை போட்டி இருந்தால் ஜூன் 19-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். அன்றைய தினம் மாலை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT