Last Updated : 06 Jun, 2025 01:55 PM

 

Published : 06 Jun 2025 01:55 PM
Last Updated : 06 Jun 2025 01:55 PM

‘துரோகம் செய்தோரை காங்கிரஸில் சேர்க்க மாட்டோம்’ - முன்னாள் முதல்வர் நாராயணசாமி

நாராயணசாமி | கோப்புப் படம்

புதுச்சேரி: துரோகம் செய்தோரை காங்கிரஸில் சேர்க்கமாட்டோம். புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையில் இண்டியா கூட்டணி தேர்தலை சந்திக்கும் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: தமிழகத்திலிருந்து இலங்கை திரும்புவோருக்கு உரிய பாதுகாப்பை அந்நாட்டு அரசு தராதது கண்டிக்கத்தக்கது. வாழ்வாதாரம் அவர்களுக்கு தரப்படுகிறதா என்பதையும் இந்திய அரசு கவனிக்க வேண்டும்.

தமிழகம், புதுச்சேரிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை தெற்கு ரயில்வே திருப்பி அனுப்பியதன் மூலம் தென் மாநிலங்களை மத்திய ரயில்வே அமைச்சர் புறக்கணிப்பது தெளிவாகிறது.

நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்காததற்கு விமான பயணத்தை அவர் தவிர்ப்பதும், அப்பா பைத்தியசாமி குருபூஜையும் காரணம் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். ரங்கசாமிக்கு உயிர் மீது பயமா? முதல்வர் விமானத்தில் செல்ல பயம் என்றால் ரயிலிலோ, காரிலோ சென்றிருக்கலாம். பிரதமர் அறிவித்த கூட்டத்தை புறக்கணிக்க இது ஓர் காரணமா என முதல்வர் ரங்கசாமி விளக்கம் தரவேண்டும்.

மாநில அந்தஸ்து தான் குறிக்கோள் என கூறும் நிலையில் இக்கூட்டத்தில் பங்கேற்று கோரிக்கையை பதிவு செய்திருக்க வேண்டும். பாஜக கூட்டணி ஆட்சியில் இருந்து கொண்டு சாமி கும்பிடுவதற்காக நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தாகக் கூறுவது பிரதமரையும், நிதி ஆயோக் கூட்டத்தை அவமதிப்பதாக உள்ளது. மாநில அந்தஸ்துக்காக எந்த முயற்சியையும் முதல்வர் ரங்கசாமி எடுக்கவில்லை.

புதுச்சேரியில் தேர்தல் சூடு பிடித்துள்ளது. வரும் தேர்தலில் பாஜக கூட்டணியில் தொடர்வீர்களா என்ற கேள்விக்கு முதல்வர் ரங்கசாமி பதில் தராமல் சென்றுள்ளார். ரங்கசாமி பாஜக கூட்டணியில் சேராவிட்டால் கட்சி காணாமல் போய்விடும். இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவார். பாஜகவை எதிர்த்து தேர்தலில் நிற்க முதுகெலும்பு இல்லை. புதுச்சேரி ஆட்சியில் ஊழல் நிரம்பியுள்ளது. தற்காலிக ஆசிரியர்களுக்கு இன்னும் பணி தரவில்லை. முதல்வர் வாக்குறுதிகள் ஏதும் நிறைவேற்றப்படுவதில்லை. மக்களை ஏமாற்றி வருகிறார்.

புதுச்சேரியில் சட்டப்பேரவை கட்ட தலைமைச் செயலர் முட்டுக்கட்டையாக இருப்பதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை கட்ட ரூ.675 கோடி கேட்கிறார்கள். தற்போது சட்டப்பேரவை இருக்கும் இடத்தில் கட்டலாம். 33 எம்எல்ஏக்கள் உள்ள சட்டப்பேரவைக்கு ரூ.675 கோடி தேவையா? மக்கள் வரிப்பணத்தை வீணாக்காமல் அதிகளவாக ரூ.200 கோடியில் கட்டலாம். உள்நோக்கத்தோடு இவ்வளவு தொகையில் சட்டப்பேரவை கட்ட கோப்பு அனுப்பி தலைமைச் செயலரை குறை கூறுவது கண்டிக்கத்தக்கது.

காங்கிரஸுக்கு துரோகம் செய்தவர் ரங்கசாமி. துரோகம் செய்தோரை காங்கிரஸில் சேர்க்க மாட்டோம். அது எனது கருத்து. கட்சியில் சேர்ப்பது பற்றி கட்சி தலைமை முடிவு செய்தால் ஏற்பேன். தேர்தலை சந்திக்க ரங்கசாமியை விட நூறு சதவீதம் தயாராக இருக்கிறோம். இண்டியா கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவுள்ளது. தமிழகத்தில் இண்டியா கூட்டணி திமுக தலைமையிலும், புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலும் தேர்தலை சந்திக்கும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x