Published : 06 Jun 2025 12:57 PM
Last Updated : 06 Jun 2025 12:57 PM
சென்னை: பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் நாளை (ஜூன் 7) உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், பக்ரீத் பண்டிகையையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின்: “தியாகத்தையும், பகிர்ந்துண்ணும் பண்பையும் போற்றும் பக்ரீத் திருநாளைக் கொண்டாடிடும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். இஸ்லாமியர்களின் இருபெரும் திருநாள்களில் ஒன்று பக்ரீத். புத்தாடை உடுத்தி, உணவினை வறியவர்க்கு ஒரு பகுதியையும், நண்பர்களுக்கு ஒரு பகுதியையும் பகிர்ந்தளித்துக் கொண்டாடும் பெருநாள்.
இஸ்லாமிய மக்களுக்காக இட ஒதுக்கீடு, கல்வி உதவித்தொகை, நங்கநல்லூரில் ஹஜ் இல்லம் என அவர்களின் சமூக - கல்வி – பொருளாதார மேம்பாடு மற்றும் உரிமைகளுக்காகத் தொடர்ந்து பணியாற்றும் சகோதர உணர்வோடு அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் எனது அன்பான பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இபிஎஸ்: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தியாகத்தைப் போற்றும் புனிதத் திருநாளாம் பக்ரீத் திருநாளை இறையணர்வுடன் கொண்டாடி மகிழும் அன்பிற்கினிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த 'பக்ரீத்' திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடும் இந்த இனிய திருநாளில் எல்லோரிடமும் இறை உணர்வும், தியாகச் சிந்தனையும், சகோதரத்துவமும் மலரட்டும்; அது மனிதகுல நல்வாழ்விற்கு மகோன்னதமாய் வழிகோலட்டும் என்று மனதார வாழ்த்தி, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது நல்வழியில், எனது பக்ரீத் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
செல்வப்பெருந்தகை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர், “தியாகம், ஈகை, இரக்கம் - மனித வாழ்வின் உயரிய அடிப்படை பண்புகள். இவை அனைத்தும் பரப்பப்படும் புனித திருநாள் இந்த பக்ரீத். வலியும், பாசமும், சமர்ப்பணமும் கலந்து பொங்கும் ஆன்மீகத் தூய்மை கொண்ட நமது சக முஸ்லிம் சகோதரர்களின் பெரும் பண்டிகை.
இந்த நாள், ஏழைஎளியோரிடம் ஈரமான இதயத்தையும், ஆதரவற்றோரிடம் ஒரு சிந்திய நம்பிக்கையையும்,, எதிரிகளிடையே கூட ஒரு இனிய புரிதலையும் உண்டாகட்டும். இணக்கமே இஸ்லாமின் இயல்பு. சமத்துவமே காங்கிரசின் சாரம். இரண்டும் சேர்ந்தால்தான் இந்தியா என்றும் நிறைவேறும். மனிதம் வாழட்டும், வேற்றுமை ஒழியட்டும், ஒற்றுமை ஓங்கட்டும்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மத, மொழி, இன வேறுபாடுகளைத் தாண்டி ஒற்றுமையை வலியுறுத்தும் போராளியாக என்றும் திகழ்ந்து வருகிறது. முஸ்லிம் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தனது வாழ்த்தை பதிவு செய்துள்ளார்.
ராமதாஸ்: “இஸ்லாமியர்களின் தியாகத்தையும், கொடைத்தன்மையையும் போற்றும் பக்ரீத் திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
பக்ரீத் தியாகத்தை மட்டுமின்றி ஈகை, மனித நேயம், நல்லுறவு, சகோதர தத்துவம், பிற சமூகங்களை நேசித்தல், அங்கம் குறைபாடுகள் உள்ளவர்கள் மீதான அன்பு செலுத்துதல் உள்ளிட்டவைகள் அடங்கும். பக்ரித் திருநாள் சொல்லும் செய்தியை புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொள்ளாதது தான் உலகம் முழுவதும் இன்று நிலவும் அனைத்து மோதல்களுக்கும், வீழ்ச்சிகளுக்கும் காரணமாக உள்ளது.
பக்ரீத் திருநாள் சொல்லும் பாடத்தை புரிந்து கொண்டால், உலகில் எங்கும் வெறுப்பு, மோதல், வன்முறை நிலவாது. மாறாக எங்கும் அன்பு சகோதரத்துவம், அமைதி நல்லிணக்கம் ஆகியவை மட்டுமே தழைத்தோங்கும்.” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அன்புமணி ராமதாஸ்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தியாகத்தை போற்றுவதற்கான பக்ரீத் திருநாளை கொண்டாடும் உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பக்ரீத் சொல்லும் பாடம் இஸ்லாமியர்களுக்கு மட்டுமானது அல்ல.
உலகில் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய பாடம் அதுவாகும். அந்த பாடத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும்; உலகம் முழுவதும் உலகில் அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம், மகிழ்ச்சி, வளம் உள்ளிட்டவை செழிக்க வேண்டும் என்று கூறி மீண்டும் ஒருமுறை பக்ரீத் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
டிடிவி தினகரன்: “தியாகத்தை போற்றும் புனிதத் திருநாளாம் பக்ரீத் திருநாளை கொண்டாடி மகிழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இறைவனின் விருப்பத்திற்கு கீழ்படிந்து நடப்பதே வாழ்க்கையின் உண்மையான நெறி என்பதை உலகிற்கு பறைசாற்றும் இந்நாளில் ஏழை, எளியோருக்கு உதவி செய்தல், தவறிழைப்போரை மன்னித்தல், பகமையை நீக்குதல், தானம் தர்மம் செய்தல் போன்ற திருக்குரானின் உயரிய போதனைகளை பின்பற்றி, ஒற்றுமையோடும், சகோதரத்துவத்தோடும் வாழ்ந்திட நாம் அனைவரும் உறுதியேற்போம்.” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT