Published : 06 Jun 2025 08:20 AM
Last Updated : 06 Jun 2025 08:20 AM
திமுக தொண்டர்களை தேர்தலுக்குத் தயார்படுத்தும் மண்டலப் பொறுப்பாளர்கள் பட்டியலில் அமைச்சர் கே.என்.நேருவும் பிரதானமாக இருக்கிறார். அப்படி இருக்கையில், அவரது சொந்த மாவட்டத்திலேயே நேரு கோஷ்டி, அன்பில் மகேஸ் கோஷ்டி என இன்னமும் தாமரை இலை தண்ணீராகவே நிற்கிறார்கள் உடன்பிறப்புகள். அண்மையில் நடைபெற்ற மாநகராட்சி பள்ளி கட்டிட திறப்பு விழாவில் இது அப்பட்டமாகவே தெரிந்தது.
ஒரு காலத்தில் திருச்சி மாவட்ட திமுக என்றால் அது கே.என்.நேருவின் முகமாக மட்டுமே இருந்தது. ஒன்றுபட்ட திருச்சி மாவட்டத்துக்கே செயலாளராக இருந்த நேரு, மாவட்ட திமுக-வை தனது கண்ணசைவில் வைத்திருந்தார். அதன் பிறகு அன்பில் மகேஸ் அவருக்குப் போட்டியாக மாவட்ட திமுக-வில் தலைதூக்க ஆரம்பித்தார். இதனால் நேருவை பிடிக்காதவர்கள் எல்லாம் மகேஸ் பக்கம் அணிவகுத்தார்கள். மகேஸ் தலைமைக்கு நெருக்கமான பிள்ளையாக இருந்ததால் அவரது வளர்ச்சியை நேருவால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அதேசமயம் கள வீரரான நேருவையும் தலைமையால் ஒதுக்கி வைக்கவும் முடியவில்லை. இதனால் கோஷ்டி பூசல் நாளொரு மேனியாய் வளர ஆரம்பித்தது.
ஒரு கட்டத்தில் நேரு திமுக-வின் முதன்மைச் செயலாளர் அந்தஸ்துக்கு உயர்ந்ததால் தலைமைக்கழக நிர்வாகிகளில் ஒருவரானார். அதேபோல் திருச்சி மாவட்ட திமுக மூன்றாக பிரிக்கப்பட்டு தெற்கு மாவட்டத்துக்கு அன்பில் மகேஸ் செயலாளரானார். கூடவே, தேர்தலில் வெற்றிபெற்று நேருவுக்கு நிகராக அமைச்சரும் ஆனார். இப்போது திருச்சி தெற்கு மாவட்ட திமுக மகேஸ் கட்டுப்பாட்டில் இருப்பது போல் வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்கள் நேருவின் மறைமுக கட்டுப்பாட்டில் இருக்கின்றன.
நேரு தலைமைக் கழக நிர்வாகியாகிவிட்டதால் இனி திருச்சி திமுக முழுமையாக மகேஸ் கட்டுப்பாட்டுக்குள் போய்விடும் என பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அப்படி நடக்காமல் திருச்சி வடக்கு, மற்றும் மத்திய மாவட்டங்களை தனது பிடிக்குள் வைத்துக்கொண்டார் நேரு. இந்த நிலையில், நேருவுக்கும் மகேஸுக்கும் இடையில் தூபம் போட்டுவிட்டு அதில் சிலர் குளிர்காயவும் ஆரம்பித்தனர். இதனால், கோஷ்டி பூசல் உச்சமடைந்து ஒரு தரப்பினரின் திருமண நிகழ்வுகளுக்குக் கூட மற்றொரு தரப்பு போவதில்லை என்ற நிலை உருவானது.
இந்த விவகாரமெல்லாம் திமுக தலைமை வரைக்கும் எட்டியதை அடுத்து, இரண்டு தரப்பும் சமாதானம் செய்து வைக்கப்பட்டார்கள். இதன் பிறகு நிலைமை கொஞ்சம் மாறியது. வடக்கு மற்றும் மத்திய மாவட்ட விவகாரங்களில் தலையிடுவதை மகேஸும் தெற்கு மாவட்ட விவகாரங்களில் தலையிடுவதை நேருவும் தவிர்த்துக் கொண்டார்கள். ஆனாலும், கோஷ்டி அரசியல் நடத்தியே பலன் கண்ட இருவரது ஆதரவாளர்களும் வெறுப்பு நெருப்பை அணைய விடுவதாக இல்லை.
இந்த நிலையில், அமைச்சர் நேருவின் சொந்தத் தொகுதியான திருச்சி மேற்கில் உள்ள எடமலைப்பட்டிபுதூரில் கட்டிமுடிக்கப்பட்ட மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி கட்டிட திறப்பு விழா கடந்த 4-ம் தேதி நடைபெற்றது. அமைச்சர்கள் நேருவும் மகேஸும் கலந்து கொண்ட இந்த விழாவை துணை மேயர் திவ்யா உள்ளிட்ட அன்பில் மகேஸின் ஆதரவாளர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்து விட்டார்கள். திவ்யா தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது கவனிக்க வேண்டிய விஷயம். மகேஸ் ஆதரவாளர்களில் மாநகரச் செயலாளர் மதிவாணன் மட்டும் கலந்து கொண்டார். மாநகராட்சி சம்பந்தப்பட்ட இந்த விழாவில் மகேஸ் ஆதரவு மாமன்ற உறுப்பினர்களும் மிஸ்ஸிங்.
மகேஸின் ஆதரவாளர்கள் இப்படி ஒட்டுமொத்தமாக விழாவை புறக்கணித்த நிலையில், அமைச்சர் நேருவோ தனது சொந்த செலவில் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான வெள்ளி வீரவாளை அமைச்சர் அன்பில் மகேஸூக்கு பரிசாக அளித்து, நாங்கள் எங்களுக்குள் சரியாகத்தான் இருக்கிறோம் என்று குறிப்பால் உணர்த்துவது போல் உணர்த்தினார்.
இதுகுறித்து அமைச்சர் நேருவிடம் கேட்டதற்கு, “எனது தொகுதிக்குட்பட்ட பகுதியில் பிரம்மாண்டமான பள்ளியை அமைச்சர் மகேஸ் திறந்து வைத்தார். அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டியது எனது கடமை. அந்த விதத்தில், சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையிலும் அமைச்சர் என்ற முறையிலும் வீரவாளை பரிசளித்தேன். மற்றபடி வேறு எந்த காரணமும் இல்லை” என்றார்.
துணை மேயர் உள்பட உங்களது ஆதரவாளர்கள் யாருமே விழாவுக்கு வரவில்லையே என அமைச்சர் அன்பில் மகேஸிடம் கேட்டதற்கு “மாநகரச் செயலாளர் மதிவாணன் பெயர் மட்டும் அழைப்பிதழில் இருந்ததால் அவர் மட்டும் விழாவில் பங்கேற்றார். துணை மேயர் திவ்யா பங்கேற்காதது குறித்து எனக்கு தெரியவில்லை. விழாவிற்கு வரவேண்டாம் என்று யாரையும் யாரும் தடுக்கவில்லை. தெற்கு மாவட்டத்தை சேர்ந்த கவுன்சிலர்கள், நிர்வாகிகள் கலைஞர் பிறந்தநாள் விழாக்களில் இருந்ததால் பங்கேற்கவில்லை என்று நினைக்கிறேன்” என்றார். எது எப்படியோ, அனைத்தும் தெரிந்த அமைச்சர்களே திமுக தலைவரின் தூக்கத்தை கெடுக்காமல் இருந்தால் சரிதான்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT