Published : 06 Jun 2025 05:26 AM
Last Updated : 06 Jun 2025 05:26 AM
திருச்சி: தமிழக கோயில்களில் பக்தர்களின் செலுத்தும் காணிக்கை மாதம் ரூ.53.70 கோடி அறநிலையத் துறைக்குச் செல்லும் நிலையில், 90 சதவீத கோயில்களில் இரவு விளக்குகள் எரிவதில்லை என்று முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கூறினார்.
திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி- ஜம்புகேஸ்வரர் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்து சமய அறநிலையத் துறையினர் பக்தர்களின் காணிக்கை பணத்தை, தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் இருந்து தினமும் ரூ.1.79 கோடி என, மாதத்துக்கு ரூ.53.70 கோடியை எடுத்துச் செல்கின்றனர். அதேநேரத்தில், மின் கட்டண செலவைக் குறைக்க வேண்டும் என்பதற்காக, திருச்செந்துறை சந்திரசேகர சுவாமி கோயிலை அதிகாலையில் திறக்காமல், காலை 9 மணிக்கு மேல் திறக்கின்றனர். கோயில் கருவறையில் கடந்த 50 ஆண்டுகாலமாக பூஜை செய்பவருக்கு தினமும் ரூ.50 என்ற அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.
அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 90 சதவீத கோயில்களில் இரவு நேரங்களில் விளக்குகள் எரிவதில்லை. 95 சதவீத கோயில்களில் நாகசுர வாத்தியங்கள் இல்லை. இத்தகைய அவல நிலையை மாற்றியமைக்க வேண்டும். கோயில் சொத்துகளை மீட்க வேண்டும். கோயில் வருவாயை ஆட்சியாளர்களும், அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும் கொள்ளையடிப்பதை தடுக்க வேண்டும். அதற்கு அறநிலையத் துறை கலைக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT