Published : 06 Jun 2025 05:03 AM
Last Updated : 06 Jun 2025 05:03 AM
சென்னை: கோயில் திருவிழாக்கள், விளையாட்டு நிகழ்வுகளில் அதிக அளவு கூட்டத்தை தவிர்க்க வேண்டும் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது: கர்நாடக மாநிலம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், காங்கிரஸ் அரசின் நிர்வாகத் தோல்வியால், கூட்ட நெரிசலில் சிக்கி, பலர் உயிரிழந்தது குறித்த கேள்விக்கு, பொதுமக்கள் கோயில் திருவிழாக்களுக்கு செல்லக் கூடாது என்று பதிலளித்திருக்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ்.
கோயில் சொத்துகளையும், பக்தர்கள் காணிக்கையாக கொடுக்கும் உண்டியல் பணத்தையும், சுரண்டிக் கொண்டிருக்கும் கூட்டம், இன்று பொதுமக்கள் கோயில் திருவிழாக்கு செல்வது நாகரிகம் இல்லை என்று கூறும் அளவுக்கு கொழுத்துப் போயிருக்கிறது.
எது நாகரிகம்? தமிழகத்தின் ஒட்டுமொத்த கனிம வளங்களையும் கடத்தி விற்பதா அல்லது ஆவின் பால் கொழுப்பைக்கூட விட்டு வைக்காமல் திருடுவதா? இந்தி கூட்டணிக் கட்சியின் நிர்வாகத் தோல்வியை மறைக்க, பொதுமக்கள் கூட்டமாக கோயில் திருவிழாக்களுக்கு செல்லக் கூடாது என்று கூறும் அமைச்சர் மனோ தங்கராஜ், தனது கட்சித் தலைவரிடம் இப்படிச் சொல்வாரா?
தமிழகத்தில் கள்ளச் சாராயமும், கஞ்சாவும், போதைப் பொருட்களும் ஆறாக ஓடிக் கொண்டிருக்கின்றன. கொலை நடைபெறாத நாளே இல்லை என்ற அளவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. ஆனால், இவர் பகுத்தறிவு பேசுகிறாராம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT