Published : 06 Jun 2025 04:33 AM
Last Updated : 06 Jun 2025 04:33 AM
சென்னை: சுதந்திர போராட்ட வீரர் காயிதே மில்லத் 130-வது பிறந்தநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தினர்.
சுதந்திர போராட்ட வீரர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவனர் மறைந்த காயிதே மில்லத்தின் 130-வது பிறந்தநாள் நேற்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசலில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்போர்வை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
உடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், சா.மு.நாசர், சென்னை மேயர் ஆர்.பிரியா, எம்.பி.,க்கள் ஆ.ராசா, நவாஸ்கனி, எம்.எம்.அப்துல்லா, எம்.அப்துல் வஹாப் எம்எல்ஏ, துணை மேயர் மு.மகேஷ்குமார், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர மொகிதீன், பொதுச்செயலாளர் அபூபக்கர், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத் தலைவர் இறையன்பன் குத்தூஸ், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத் தலைவர் துறைமுகம் காஜா, மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் நே.சிற்றரசு, தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் இரா.வைத்திநாதன் உள்ளிட்டோர் இருந்தனர்.
இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பக்கத்தில்,"எவரும் குறைகாண முடியாத அப்பழுக்கற்ற வாழ்க்கைக்குச் சொந்தக்காரர். இஸ்லாமிய சமூகத்தின் இணையற்ற தலைவர். பெரியாரால் அரிய தலைவர் எனப் போற்றப்பட்டவர். முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதி மீது அன்பைப் பொழிந்தவர்.
1967-ல் திமுக ஆட்சியமைக்கத் துணைநின்றவர். நாட்டுப்பற்றிலும் மொழிப்பற்றிலும் எஃகு போன்ற உறுதியைக் காட்டிய கண்ணியத்தென்றல் காயிதே மில்லத் பிறந்தநாளில், அவர் பிறந்த திருநெல்வேலி மாவட்டத்தில் அமையவுள்ள மாபெரும் நூலகத்துக்கு அவரின் பெயர் சூட்டப்படும் என அறிவித்த மனநிறைவோடு நினைவிடத்தில் மரியாதை செலுத்தினேன்" என தெரிவித்துள்ளார்.
இதே போல் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் சமூக வலைதள பக்கத்தில், "இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராகவும், இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றிய பெருமைக்குரியவரும், தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டுமென நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியவருமான காயிதே மில்லத் பிறந்தநாளில் அவரின் புகழையும், தமிழ்பற்றையும் போற்றி வணங்குகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், டி.ஜெயக்குமார், பா.பெஞ்சமின், அன்வர் ராஜா, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், விசிக தலைவர் திருமாவளவன், அமமுக துணை பொதுச்செயலாளர் ஜி.செந்தமிழன், கொள்கை பரப்புச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
காயிதே மில்லத்துக்கு புகழாரம் சூட்டும் வகையில் அரசியல் கட்சித் தலைவர் சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
பாமக தலைவர் அன்புமணி: காயிதே மில்லத் விரும்பியவாறு அன்னைத் தமிழுக்கு அரியணை பெற்றுத் தரவும், மக்கள் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தவும் உறுதியேற்போம்.
நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: தமிழே இந்தியாவின் ஆட்சி மொழியாக வேண்டுமென நாடாளுமன்றத்தில் முழங்கிய காயிதேமில்லத் பெரும்புகழ் போற்றுவோம்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா: வாழ்நாள் முழுவதும் நல்லிணக்கத்துக்காக பாடுபட்டவர். மாநில மொழி, மாநில உரிமைகளுக்காக போராடியவர்
தவெக தலைவர் விஜய்: தமிழ் மண்ணில் நல்லிணக்கத்துக்காக தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட தலைவர். சமூக ஒற்றுமைக்காக நேர்மையான தூய்மையான பாதையில் பயணித்த அவரது பிறந்த நாளில் அவரது சேவைகளை நினைவுகூர்ந்து போற்றி மகிழ்வோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT