Published : 06 Jun 2025 12:17 AM
Last Updated : 06 Jun 2025 12:17 AM
சென்னை: ‘சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு மக்கள் துணை நிற்க வேண்டும்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் துறை சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா சென்னை வர்த்தக மையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், புதிதாக தேர்வான வனக்காவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அதன்பின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக மாவட்ட அளவில் சிறப்பாக பணியாற்றிய ஆட்சியர்களுக்கு பசுமை விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன், தா.மோ.அன்பரசன் மற்றும் துறைசார் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நமது பூமி கடும் நெருக்கடியில் இருக்கிறது என்ற உண்மையை உணர வேண்டும். நமது குழந்தைகளின் எதிர்காலம் இப்போது நாம் செய்யும் செயல்களை பொறுத்துதான் அமையும். இந்த புவி மூச்சுவிட உதவுகிற நுரையீரல் காடுகள்தான். அவற்றைப் பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமையாகும். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக கடந்த 4 ஆண்டில் பல்வேறு முன்னெடுப்புகளை செயல்படுத்தி வருகிறோம்.
அதன்படி 2,403 ஹெக்டேர் பரப்பில் புதிய அலையாத்தி காடுகளை உருவாக்கி இருக்கிறோம். 1,207 ஹெக்டேர் தரங்குன்றிய சதுப்புநிலக் காடுகளை மீட்டெடுத்துள்ளோம். முக்கியமான நீல கார்பன் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு புத்துயிர் வழங்கியுள்ளோம். மேலும், மன்னார் வளைகுடாவில் இருக்கும் தனுஷ்கோடியில், தமிழகத்தின் முதல் கிரேட்டர் பிளமிங்கோ சரணாலயம் குறித்த அறிவிப்பையும் தற்போது வெளியிடுகிறேன்.
பல்லுயிர்ப் பெருக்கம், காலநிலை மாற்றம் இவ்விரண்டுக்கும் இடையில் வலுவான தொடர்புள்ளது. அதை உணர்ந்து அதற்கேற்ப தமிழகம் முன்னோடி மாநிலமாக செயல்பட்டு வருகிறது. மேலும், அதிகம் அறியப்படாத மற்றும் அருகி வரும் உயிரினங்களைப் பாதுகாப்பதிலும் உறுதியாக இருக்கிறோம்.
அதேநேரம் இத்தகைய திட்டங்களால் மட்டும் இயற்கைக்கான நெருக்கடியை தீர்த்துவிட முடியாது. ஊர் கூடித்தான் தேர் இழுக்கவேண்டும். அதனால்தான் தொழில்களுக்கான தன்னார்வ பசுமை மதிப்பீட்டை அறிமுகப்படுத்தினோம். சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புணர்ச்சி, தொழில்துறை வளர்ச்சியின் மையமாக இருக்க வேண்டும். நமது கனவு ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மட்டும் அல்ல. அது ஒரு பசுமை பொருளாதாரமாக இருக்க வேண்டும். இந்த ஆண்டில் இருந்து நம்முடைய தனித்துவமான உயிரினங்களின் ஆராய்ச்சி, கல்வி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த புதிய பாதுகாப்பு மையங்கள் நிறுவப்படும்.
இதற்கிடையே 2021-ல் பிளாஸ்டிக் மாசுபாட்டை எதிர்த்துப் போராட ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டத்தை தொடங்கினோம். இது அரசின் திட்டமாக மட்டுமல்லாமல், மக்கள் இயக்கமாக மாறவேண்டும். அரசு திட்டங்களை கொண்டுவரத்தான் முடியும். அதன் வெற்றி மக்கள் தங்கள் அன்றாட பழக்கங்களை மாற்றிக் கொள்வதில்தான் இருக்கிறது. துணிப்பை மற்றும் தண்ணீர் பாட்டில் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே புறப்படமாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்வோம்.
அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா போன்று இந்தியா ஆக வேண்டுமெனில், அந்த மக்களுக்கு இருக்கக்கூடிய சுய ஒழுக்கம் நமக்கும் இருக்க வேண்டும். அதற்கான முதல்படிதான் குப்பைகளை தரம் பிரித்து போடுவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த தூய்மை மிஷன் திட்டமாகும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அரசு செயல்படுத்தும் திட்டங்களை உங்கள் சொந்த திட்டமாக நினைத்து மக்கள் துணை நிற்க வேண்டும். நம் சொகுசுக்காக இயற்கையை மாசுபடுத்தாமல், நம்மை வாழவைக்கும் இயற்கையைப் பாதுகாக்க உறுதியேற்போம்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT