Published : 05 Jun 2025 04:25 PM
Last Updated : 05 Jun 2025 04:25 PM
கடலூர்: “பாமகவுடன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இணையாது. அந்தப் பேச்சுக்கே வாய்ப்பில்லை” என கடலூரில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கடலூரில் இன்று (ஜூன்.5) செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “பாமக நிறுவனர் ராமதாஸை தைலாபுரம் தோட்டத்தில் எனது சகோதரர் திருமால்வளவன் நேரில் சந்தித்தார். இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் வந்தது. ஆனால், இந்தச் சந்திப்புக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நானும் எனது குடும்பமும், எனது சகோதரர்களும் கடலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்திலும் பாட்டாளி மக்கள் கட்சிக்காக நாங்கள் உழைத்தோம்.
ராமதாஸ் எங்களை வழிநடத்தினார். அவர் மூலமாக நான் இரண்டு முறை எம்எல்ஏ பதவியை பெற்றேன். முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா என்ற ஆளுமைகளுடன் நேரடியாக பணியாற்றினேன். தற்போது ராமதாஸ், அன்புமணிக்கு கருத்து முரண்பாடு ஏற்பட்டு உள்ளது. அதில் ராமதாஸ் மனம் வருந்தி பத்திரிகையாளர் சந்திப்பில் கண்ணீர் விட்டதை கண்ட என் கட்சி நிர்வாகிகளும், நானும், எனது சகோதரர்களும் வருத்தம் அடைந்தோம்.
சமூக நீதி தளத்தில் தொடர்ந்து பயணித்து வருவது பாமக. இந்தக் கட்சியில் தற்போது ஏற்பட்டுள்ள சிறு குழப்பம் தீர வேண்டும் என நாங்கள் மனதார விரும்புகிறோம். மன வருத்தத்தில் இருந்த ராமதாஸை திருமால்வளவன் நேரில் சந்தித்து உங்களால் நாங்கள் வளர்க்கப்பட்டோம், நாங்கள் இருக்கிறோம் என ஆறுதல் தெரிவித்து வந்துள்ளோம். அவ்வளவுதான் இந்தச் சந்திப்பு, இந்தச் சந்திப்பின் நோக்கமும் அதுதான். அதேபோல் அன்புமணி ராமதாஸ் ஏற்கெனவே நடந்தவை நடந்தபடியாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லதாக இருக்கட்டும் என தொலைபேசியில் கடந்த காலங்களில் என்னை தொடர்பு கொண்டு பேசினார்.
ராமதாஸின் பெரும் தொகையை எடுத்துவிட்டும், அன்புமணி சொத்தை எடுத்து வந்து விட்டோம் என என்னை விமர்சித்து பேசப்பட்டது. அவற்றுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைப்பது போல் ராமதாஸ் தாய் உள்ளத்துடன் எனது சகோதர் உடன் பேசினார். கடந்த கால கசப்புகளை மறந்து எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொண்டு பேசலாம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
கடந்த 25 ஆண்டு காலமாக நம் உழைப்பை சுரண்டி கொண்டார்கள் என்ற ஆதங்கத்தில் ராமதாஸ் , அன்புமணி மீது கடும் விமர்சனம் தெரிவித்துள்ளேன். அதற்கு எல்லாம் மருந்து போடுவது போல் நேற்று ராமதாஸ் சந்திப்பு, அன்புமணி கடந்த காலங்களில் என்னிடம் பேசியது மன நிறைவு ஏற்பட்டு உள்ளது. தற்போது நான் களங்கமற்றவன். நான் எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. அவர்களும் எனக்கு எதுவும் தரவில்லை என்பதை தெளிவுபடுத்தி உள்ளதோடு, ஆரோக்கியமான அரசியலுக்கு முன்வகித்துள்ளது.
மேலும், கடந்த சில காலங்களாக விமர்சனம் செய்யாமல் தவிர்த்து வருகிறேன். நான் என் பணியை மேற்கொண்டு வருகின்றேன். எங்களை வளர்த்தவர்களை சந்தித்தார். அதனால் வேல்முருகன் பாமகவில் சேருகிறார் என்றும், அன்புமணி ராமதாஸுக்கு எதிர்ப்பாக வேல்முருகன் ராமதாஸுடன் பயணிக்க உள்ளார் எனக் கூறுவது உண்மைக்கு மாறானவையாகும்.
பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் எனது தலைமையை ஏற்றுக் கொண்டு தமிழக வாழ்வுரிமை கட்சியில் தமிழ் தேசிய அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக வாழ்வுரிமைக் கட்சி தனித்து தமிழ்நாட்டு மக்களுக்காகவும் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்காகவும் போராடி வருகிறது என மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். வருகிற செய்திகள் எல்லாம் கற்பனை ஆகும்.
பாமகவுடன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இணையாது. அந்த பேச்சுக்கே வாய்ப்பில்லை. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சேலத்தில் பல்வேறு கட்சியில் இருந்து விலகி 500 பேர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர். அந்த இணைப்பு விழாவில் அதிக நேரம் பேசினேன். அந்த பேச்சில் பல்வேறு பாதிப்புகள் குறித்து பேசினேன். இதில் உண்மைக்கு மாறான செய்திகள் திரித்து கூறி வருகின்றனர்.
நடிகர் விஜய் கட்சி தொடங்கிய நிலையில், தமிழனாக நான் வரவேற்றேன். அதே நேரத்தில் கடந்த பத்தாண்டு காலமாக மக்களுக்கும் போராளி இயக்கங்களுடன் சேர்ந்து மக்களின் வாழ்வுரிமை பிரச்சினைக்காக தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக நான் போராடி வருகிறேன். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என கூறிய போது நான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தேன். நான் விமர்சனங்களை தெரிவித்தேன். ஆனால் விஜய்க்கு எந்த ஒரு விமர்சனமும் தெரிவிக்கவில்லை. அவர் ஒரு தமிழர். மக்களுக்காக அரசியல் செய்யட்டும்.
ஆனால், நான் எடுத்தவுடன் சட்டமன்றத்துக்கு தான் செல்வேன் என்கிறார். உள்ளாட்சித் தேர்தல், நகர சபை தேர்தல் அதன் பிறகு, சட்டசபை தேர்தல் பத்தாண்டு காலம் மண்ணுக்கும் மக்களுக்கும் போராடட்டும். அதன் பிறகு எனக்கு வாக்களியுங்கள் என கேளுங்கள். திரைத்துறையில் நடித்துமுடித்துவிட்டு பல கோடி சம்பாதித்துவிட்டு, தற்போது அரசியலுக்கு வருவேன் என கூறி செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு தான் போவேன் என கூறியதற்கு விமர்சனம் செய்தேன்.
தமிழர்களுக்கு ஓர் அடையாளம் இருக்கின்றது என அடிப்படை கருத்து கூறினேன். வாழும் காமராஜர் என்றும் வருங்கால காமராஜர் என்றும் ஒப்பிட்டு பேசியதற்கு பதில் சொல்வது போல் காமராஜர் எவ்வளவு பெரிய மாபெரும் தலைவர் சமீபத்தில் வந்த விஜய்யை எப்படி ஒப்பிட்டு பேசுவீர்கள் என கூறினேன். திரைத்துறையில் வசனம் பேசுவதும், அதே மூலதனமாகக் கொண்டு தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்துக்கு வர துடிப்பது ஏற்புடையது அல்ல.
மக்களுக்காகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இருந்து வருகின்றனர். தமிழக மக்களாகிய நீங்கள் விழிப்புணர்வு பெற வேண்டும். தமிழகத்தில் சினிமா மோகம் ஆட்படுத்தி உள்ளது. மக்கள் கலையைக் கலையாகப் பார்க்க வேண்டும், நடிகரை நடிகராகப் பார்க்க வேண்டும், அவர்களது நடிப்பைப் பாராட்ட வேண்டும். அதனை விட்டுவிட்டு கட்டவுட்டுக்கு பாலபிஷேகம் செய்வது போன்ற மோசமான பண்பாட்டுச் சிதைவுகளைச் செய்ய வேண்டாம். இது தமிழ் சமுதாயத்தின் கலாச்சாரத்துக்கு எதிரானதாகும் .
நான் 40 ஆண்டு காலமாக மக்களுக்காக பல்வேறு போராட்டங்கள் செய்து வருகின்றேன். அதற்காக எனது கட்சியின் நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகள் எடுத்துக் கூறினேன். உங்கள் பெற்றோர்களை மதித்து பாலபிஷேகம் செய்து உள்ளீர்களா? ஆனால் நடிகர்களுக்கு எதற்குப் பாலாபிஷேகம் செய்கிறீர்கள்? எனக் கேட்டேன். இதில் ஒரு சில பெண்கள் கணவரை வைத்துக்கொண்டு ஒரு சில நடிகரை நேரில் பார்த்தாலோ அவரிடம் ஒரு முத்தம் கொடுத்தாலே போதும் எனக் கூறி வருவதைக் கண்டித்துப் பேசினேன்.
எனது முழு கருத்தைக் கேட்காமல் எங்களது தளபதி பற்றிப் பேசி விட்டாய் மன்னிப்பு கேட்க வேண்டும் என அவரது கட்சி நிர்வாகிகள் பேசி வருகின்றனர். நான் நாகரிகத்துடன் சொல்கின்றேன். எனது பயணம் ஒன்றிய அரசு, பயங்கரவாத அரசியலை எதிர்த்து தான், அதற்காகதான் நான் கட்சியைத் தொடங்கி உள்ளேன்.
சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவதூறாகப் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் . இந்த மண்ணையும் மக்களையும் 40 ஆண்டு காலமாக நேசித்து பல்வேறு இன்னல்களைச் சந்தித்து யாராக இருந்தாலும் எதிர்த்து வருகின்றேன். விஜய் இளம் பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார் என நான் பேசி உள்ளேனா? நீங்கள் எதற்காக நான் சொன்னேன் என எடுத்துக் கொள்கிறீர்கள் என புரியவில்லை. கணவன் முன்பு இளம்பெண்கள் நடிகர்களைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கின்றனர். ஏதோ இன்றைக்கு விஜய்க்கு ரசிகர்கள் இருக்கலாம்.
நான் அரசியல் கட்சித் தலைவர் என்ற முறையில் நான் பேசுகிறேன். இதற்கு எதிர்ப்பு இருந்தால் வேல்முருகன் இப்படி அவதூறாகப் பேசுவது, தவறான கருத்தைப் பேசி வருகிறார் எனப் பத்திரிகையாளர்களைச் சந்தித்துக் கூறுங்கள். ஆனால் அதனை விட்டுவிட்டு வீடியோ, சமூக வலைதளங்களில் தேவையற்ற பேச்சுகள் வருவது விஜய்க்கு அழகல்ல. இதனை உடனடியாக விஜய் தடுத்து நிறுத்த வேண்டும். நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பேசி வருவது சரியல்ல என விஜய்க்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்” எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT