Published : 05 Jun 2025 05:51 AM
Last Updated : 05 Jun 2025 05:51 AM
சென்னை: மின்வாரியத்தின் விநியோக கட்டமைப்பை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த அனுமதிப்பதில் ஊழல் நடைபெறுவதாலேயே நஷ்டம் குறையவில்லை என மின்துறை பொறியாளர்கள் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக அமைப்பின் தலைவர் சா.காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 2022-ம் ஆண்டு முதல் தவறான கணக்குகள் அடிப்படையில் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அப்போது, ரூ.1.59 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதற்கான காரணத்தை வாரியம் சொல்லாமல் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தடுத்துவிட்டது. மின்வாரியத்தின் விநியோக கட்டமைப்பை பல்வேறு நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன.
இதற்கான கணக்குகள் மூடி மறைக்கப்பட்டு, ஏராளமான முறைகேடுகள், ஊழல் நடைபெறுகின்றன. தகுதியில்லாதவர்களுக்கு மின்வாரிய கட்டமைப்பை பயன்படுத்த அனுமதித்திருப்பதால் ஆண்டுக்கு ரூ.1800 கோடி இழப்பு ஏற்படுகிறது. குறிப்பாக 2017-21 காலகட்டத்தில் பெருநிறுவனங்களிடம் இருந்து ரூ.9,313 கோடியை வாரியம் வசூலிக்கவில்லை.
இந்தத் தொகை மின் கட்டண உயர்வில் கழிக்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறாக வசூலிக்காமல் விடுபட்டது உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யவே மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஆனால், நஷ்டம் மட்டும் ரூ.24 ஆயிரம் கோடி என்றளவிலேயே தொடர்கிறது. மக்களிடம் அதிக தொகையை வசூலித்து பெருநிறுவனங்களுக்கு வாரியம் வாரி வழங்குகிறது.
தவறான அடிப்படையில் 5 ஆண்டுகள் உயர்த்தப்பட்ட கட்டணம் நிறுத்தம் செய்யப்பட்டு, உண்மையான கணக்கு அடிப்படையில் நிர்ணயம் செய்ய வேண்டும். மின்வாரியத்தின் இழப்பை அரசு ஏற்கும்போது நலத்திட்டங்கள் தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இச்சந்திப்பின்போது மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் பிரவீன்குமார் உடனிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT