Published : 05 Jun 2025 05:48 AM
Last Updated : 05 Jun 2025 05:48 AM
மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் 2-ம் கட்டமாக 10 மற்றும் 12-ம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் கல்வி விருது மற்றும் பாராட்டு சான்றுகளை வழங்கினார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்த மாணவ, மாணவிகளுக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், கல்வி விருது வழங்கும் விழா, 2-ம் கட்டமாக மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நேற்று நடைபெற்றது.
இதில், சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் தங்களின் பெற்றோர்களுடன் பங்கேற்றனர். விழாவில், தவெக தலைவர் விஜய் பங்கேற்றார். முதலில், மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளை சந்தித்து பேசினார். பின்னர், அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அனைவரையும் வரவேற்றார்.
இதையடுத்து, 12-ம் வகுப்பில் 599 மதிப்பெண்கள் பெற்ற திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதியை சேர்ந்த ராகுலுக்கு தங்க மோதிரம், பாராட்டு சான்று மற்றும் 10-ம் வகுப்பில் 499 மதிப்பெண்கள் பெற்ற மடத்துக்குளம் தொகுதியை சேர்ந்த திவ்யலட்சுமிக்கு வைரத்தோடு, பாராட்டு சான்று மற்றும் 499 மதிப்பெண்கள் பெற்ற மன்னார்குடி தொகுதியை சேர்ந்த முருகனுக்கு தங்கமோதிரம், பாராட்டு சான்று உள்ளிட்டவைகளை விஜய் வழங்கினார்.
பின்னர், 15 மாவட்டங்களில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற 504 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றுகள் மற்றும் ரூ.5 ஆயிரத்துக்கான காசோலைகளை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் காலை உணவு மற்றும் மதியம் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அக்கட்சியின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா மற்றும் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்துக் கொண்டனர். மேலும், வரும் 13-ம் தேதி 3-ம் கட்டமாக கல்வி விருது வழங்கும் விழா நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT