Published : 05 Jun 2025 05:14 AM
Last Updated : 05 Jun 2025 05:14 AM
சென்னை: அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் 30 ஆண்டுகால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசேகரன் மீதான குண்டர் தடுப்புச்சட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் தொடர்ந்துள்ள வழக்கில், தமிழக அரசு 3 மாத காலத்தில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு மகளிர் நீதிமன்றம் 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்நிலையில் ஞானசேகரன் மீதான குண்டர் தடுப்புச்சட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் கங்காதேவி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ் ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ‘‘அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவரை குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்" என்றார்,
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.முருகவேல், ஞானசேகரன் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் அரசியல் உள்நோக்கத்துடன் போடப்பட்டுள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் எந்தவொரு குற்றச்செயலிலும் அவர் ஈடுபடவில்லை. எனவே அவர் மீதான குண்டர் தடுப்புச்சட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரினார்.
அதையடுத்து நீதிபதிகள், ஞானசேகரன் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் நாங்கள் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை. அதேநேரம் மற்ற வழக்குகளில் அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து போலீஸார் 3 மாதங்களில் பதிலளிக்க வேண்டும் எனக்கூறி விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT