Published : 05 Jun 2025 12:49 AM
Last Updated : 05 Jun 2025 12:49 AM

இன்று முதல் 10-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வரும் 10-ம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும். ஒருசில இடங்களில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (ஜூன் 5) முதல் 10-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒருசில இடங்களில் இன்றும், நாளையும் (ஜூன் 5, 6) அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை 84 டிகிரி முதல் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும்.

வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 35-45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இந்த பகுதிகளுக்கு மீனவர்கள செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை பாரிமுனை, சென்ட்ரல், பெரம்பூரில் 4 செ.மீ., சென்னை நுங்கம்பாக்கம், வளசரவாக்கம், ஐஸ் ஹவுஸ், சேலம் மாவட்டம் ஓமலூர், விழுப்புரம் மாவட்டம் வானூர், முண்டியம்பாக்கம், முகையூர், நீலகிரி மாவட்டம் கூடலூர் சந்தை, மேல் கூடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் மடம்பூண்டியில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x