Published : 04 Jun 2025 07:29 PM
Last Updated : 04 Jun 2025 07:29 PM
சென்னை: கடந்த 2013-ம் ஆண்டு நடந்த மரக்காணம் கலவரத்தை தொடர்ந்து ஏற்பட்ட இழப்பை, பாமகவிடம் வசூலிப்பது தொடர்பான விசாரணையை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நடத்தி எட்டு வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாமல்லபுரத்தில், கடந்த 2013-ல் வன்னியர் சங்க சித்திரை திருவிழா நடந்தது. அப்போது மரக்காணத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன. பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் தீவைக்கப்பட்டன. பாமகவினர் போராட்டம் காரணமாக, 2013 ஏப்ரல் 25-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தாக்கல் செய்த மனுவில், “12 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பை பாமகவிடம் இருந்து வசூலிப்பது தொடர்பாக, தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் விசாரணை நடத்தி வருகிறார்.இந்த விசாரணை, தமிழ்நாடு பொது சொத்து சேதம் தடுப்பு சட்டத்தை பின்பற்றி நடத்தப்படவில்லை. இழப்பீட்டை தீர்மானிக்கும் முன், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதா என ஆரம்பகட்ட விசாரணை நடத்த உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
அதை பின்பற்றாமல் இழப்பீடு குறித்து முடிவு செய்யும் விசாரணையை நடத்த கூடாது. இழப்பீடு கோரி டாஸ்மாக் நிர்வாகம், போக்குவரத்து கழகங்கள் அளித்த விண்ணப்பங்களை நிராகரிக்க வேண்டும். சட்ட விதிகளை பின்பற்றி விசாரணை நடத்தாமல் இழப்பீடு குறித்து இறுதி உத்தரவு பிறப்பிக்க தடை விதிக்க வேண்டும்,” என மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், “வெறும் அச்சத்தின் அடிப்படையில், வருவாய் நிர்வாக ஆணையரின் விசாரணையை தடுக்கும் நோக்கில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவு மற்றும், சட்ட விதிகளின்படி விசாரணை நடத்தப்படும்,” என உறுதியளித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, உயர் நீதிமன்ற உத்தரவின்படி விசாரணையை நடத்தி, எட்டு வாரங்களில் இறுதி உத்தரவை பிறப்பிக்க உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT