Published : 04 Jun 2025 06:06 AM
Last Updated : 04 Jun 2025 06:06 AM
சென்னை: இந்து முன்னணி நடத்தும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு அனைத்து இந்து இயக்கங்களையும் அழைக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் அமைப்பு குழு பொதுச் செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் தற்போது சித்தாந்த ரீதியாக பல துன்பங்களை வேதனைகளை சந்தித்து வருகிறது.
அதில் குறிப்பாக இந்துக்கள் சொல்லிக்கொள்ள முடியாத துயரங்களை இந்த திராவிட மாடல் அரசால் பெறுகின்றனர். முருக பக்தர்கள் மாநாடு இந்துக்களை ஒற்றுமைப்படுத்தும் மாநாடாக அமைய வேண்டும். இந்துக்கள் ஒற்றுமையாக உள்ளோம் என்பதை நாம் நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
இந்து முன்னணி பேரியக்கம் அனைத்துக் கட்சி தலைவர்களையும் முறைப்படி முருக பக்தர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்ததை நான் வரவேற்கிறேன். ஏனெனில் இந்துக்களுக்கு ஆபத்து வரும் சூழலில் கட்சி பாகுபாடுகளை கலைந்து நாம் அனைவரும் இந்துக்கள் என்ற ஒற்றுமை ஓங்கி ஒலிக்க வேண்டும். தமிழகத்தில் தற்போது உள்ள சூழலில் எதிரிகள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். பெரும்பான்மையான நாம் சிதறிப்போய் உள்ளோம்.
எனவே அனைத்துக் கட்சி தலைவர்களையும் சந்தித்து முறைப்படி அழைப்பு கொடுக்கும் இந்து முன்னணி பேரியக்கம் தமிழகத்தில் உள்ள அனைத்து இந்து இயக்கங்களையும் சந்தித்து அழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT