Published : 04 Jun 2025 04:39 AM
Last Updated : 04 Jun 2025 04:39 AM
சென்னை: தமிழகத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம், மாற்றுத் திறனாளி பிரதிநிதிகள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டம் கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் துறைவாரியான மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் மார்ச் 24-ம் தேதி முதல் ஏப்.29-ம் வரை நடைபெற்றது.
இந்த காலகட்டத்தில், நிதி மசோதாக்கள், கலைஞர் பல்கலைக்கழகம், மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம் வழங்குவது, கடன் நிறுவனங்களின் வலுக்கட்டாய நடவடிக்கைகளில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பது உட்பட 18 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டன.
இதில், தமிழக அரசின் 4 நிதி மசோதாக்களுக்கு கடந்த மே 17-ம் தேதி ஆளுநர் ஒப்புதல் அளித்தார். மேலும் 14 மசோதாக்கள் நிலுவையில் இருந்தன. இந்நிலையில், கடந்த ஏப்.16-ம் தேதி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த, நகர்ப்புற, ஊரக உள்ளாட்சிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். அரசிதழில் இந்த சட்டம் வெளியிடப்படுவதன் மூலம் அமலுக்கு வருகிறது.
இந்த சட்டத்தின் மூலம், மாற்றுத் திறனாளிகளில் 650 பேர் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், 12,913 பேர் கிராமப் பஞ்சாயத்துகளிலும், 388 பேர் ஊராட்சி ஒன்றியங்களிலும், மாவட்ட ஊராட்சிகளில் 37 பேரும் நியமிக்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளுநருக்கு பயம்: இதனிடையே மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினத்தை ஒட்டி, சென்னை அண்ணா அறிவாலயத்தில், அவரது படத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அப்போது. செய்தியாளர்கள் கருணாநிதி பிறந்தநாள் செய்தி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம் வழங்கும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தது குறித்து கேள்வி எழுப்பினர்.
இதற்கு முதல்வர் பதிலளித்ததாவது: அரசின் சாதனைகளை விளக்கிச்சொல்லும் வகையில் தொடர்ந்து பிரச்சாரம் நடைபெற உள்ளது. உள்ளாட்சிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது எதிர்பார்த்ததுதான். அது ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை. சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியுள்ளோம். அதற்கு அவர் ஒப்புதல் அளித்துள்ளார். ஒருவேளை நாம் நீதிமன்றம் சென்றுவிடுவோமோ என பயந்து அவர் ஒப்புதல் அளித்திருக்கலாம். வேறு ஒன்றும் இல்லை. இவ்வாறு அவர் பதிலளித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT