Published : 04 Jun 2025 04:24 AM
Last Updated : 04 Jun 2025 04:24 AM
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, கோபாலபுரம், அறிவாலயம், நினைவிடம் உள்ளிட்ட இடங்களில் அவரது உருவப்படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 102-வது பிறந்த தினம் நேற்று (ஜூன் 3) கொண்டாடப்பட்டது. இதையொட்டி திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், நேற்று காலை கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்று, அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதன்பின், சிஐடி நகரில் உள்ள இல்லத்தில், கருணாநிதியின் படத்துக்கு மரியாதை செலுத்தினார். அப்போது, ராசாத்தி அம்மாள், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்கள், துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அதைத்தொடர்ந்து, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு வந்த முதல்வர், அங்குள்ள அண்ணா, கருணாநிதி சிலைகளுக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், முரசொலி அலுவலகம் சென்ற முதல்வர், அங்குள்ள கருணாநிதி சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அங்கும் அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள, அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பின்னர், காலை 9.30 மணிக்கு, அண்ணா சாலையில் ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மு.பெ.சாமிநாதன், பி.கே.சேகர்பாபு, டி.ஆர்.பி.ராஜா, காங்கிரஸ் கட்சி சார்பில் கு.செல்வப்பெருந்தகை, கே.வீ.தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுதவிர திமுக சார்பில், கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றிய திட்டங்கள், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத்தந்தது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் குறித்து அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் பலர் பங்கேற்கும் நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டன.
கருணாநிதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் திமுக நிர்வாகிகள் சார்பில், அன்னதானம், பரிசுப்பொருட்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT