Published : 03 Jun 2025 03:41 PM
Last Updated : 03 Jun 2025 03:41 PM
அரியலூர்: “இரண்டு மூன்று நாட்களாக குறிப்பிட்ட சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு என்ற ஒரு செய்தி பரவலாக வந்து கொண்டிருக்கிறது. இந்த செய்தி தவறானது,” என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
அரியலூரில் தமிழக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று (ஜூன் 3) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “இரண்டு மூன்று நாட்களாக குறிப்பிட்ட சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு என்ற ஒரு செய்தி பரவலாக வந்து கொண்டிருக்கிறது. இந்த செய்தி தவறானது. தனியார் பேருந்து உரிமையாளர்கள் தங்களுக்கான பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடி இருக்கிறார்கள்.
அப்படி அந்த நீதிமன்றத்தை அவர்கள் நாடியிருக்கின்ற நேரத்தில், நீதிமன்றம் இது குறித்து மக்களுடைய கருத்தை கேட்டு, ஒரு தகவல் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கி இருக்கிறது. அந்த அடிப்படையில், மக்களுடைய கருத்துக் கேட்பு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே, தனியார் பேருந்து உரிமையாளர்களின் வழக்கின் அடிப்படையில், அவர்களுடைய பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று இந்த கோரிக்கையை நீதிமன்றத்துக்கு வந்திருக்கிற காரணத்தினால், நீதிமன்ற நடவடிக்கையினால் தான் இந்த கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறுகிறது.
அரசைப் பொறுத்தவரை, அரசாக இந்தக் கூட்டத்தை நடத்தவில்லை. அரசின் நிலைப்பாடு கடந்த காலங்களில் பலமுறை மீண்டும் மீண்டும் எடுத்து வைக்கப்பட்டிருக்கிறது. தமிழக முதல்வர் மிகத் தெளிவாக சொல்லி இருக்கின்றார். ஏற்கெனவே, சிலமுறை இதுபோன்று பேருந்து கட்டண உயர்வு தகவல் வந்தபோது கூட, ஒரு காலத்திலும் பேருந்து கட்டண உயர்வு இருக்காது. தமிழகத்தில் போக்குவரத்து துறை கடும் நெருக்கடிகள் இருந்தாலும், பொருளாதார சிக்கல்கள் இருந்தாலும், மத்திய அரசு டீசல் விலையை பலமுறை கூட்டி இருந்தாலும், அதனையொட்டி பேருந்து கட்டண உயர்வு இருக்காது என்று அறிவித்திருக்கிறார்.
இன்றைக்கு உலக அளவில் டீசல், பெட்ரோல் விலை குறைந்திருந்தாலும், இந்தியாவை பொறுத்தவரை, மத்திய அரசு டீசல், பெட்ரோல் விலையை குறைக்கவில்லை. இருந்தாலும், அந்த பாதிப்பும் பொதுமக்கள் மீது விழக்கூடாது, அந்த சுமை பொதுமக்கள் மீது சுமை என்று தான் தமிழக முதல்வர், அரசு பேருந்து கட்டணம் உயர்வு இருக்காது என்று ஏற்கெனவே பலமுறை தெளிவுப்படுத்திக் கொண்டிருக்கிறார். நாங்களும் தெளிவுபடுத்திருக்கிறோம். மீண்டும் அதே தான் அதைதான் வலியுறுத்த விரும்புகிறேன்.
தமிழக அரசு போக்குவரத்து பேருந்து கட்டணத்தை உயர்த்தாது என்று அறிவித்த காரணத்தினால்தான், தனியார் பேருந்து உரிமையாளர்கள் நீதிமன்றத்தின் உதவியை நாடி இருக்கிறார்கள். அங்கே அவர்களுடைய வழக்கின் அடிப்படையில், மக்களுடைய கருத்தை கேட்கச் சொல்லி, நீதிமன்றம் அந்த அறிவுரையை வழங்கி இருக்கிறது. எனவே, அந்த அடிப்படையில் தான், இந்த கருத்துக் கேட்புக் கூட்டமே தவிர, தமிழக அரசின் நிலைப்பாட்டில் என்றைக்கும் எந்த மாறுபாடும் இருக்காது. அந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தின் கருத்து நீதிமன்றத்துக்கு தான் வழங்கப்படும்.
இங்கே அரசினுடைய கருத்தைக் கேட்கின்றபோது பொதுமக்களுக்கு சுமை இல்லாமல் கொண்டு செல்ல வேண்டும் என்ற கருத்து தான் வலியுறுத்தப்படும். ஏற்கெனவே, மின் கட்டண உயர்வு இருக்கும் என்ற ஒரு செய்தி வந்தபோதும், கடந்த காலங்களில் இருந்தது என்ற அந்த கருத்து வந்த போதும், மீண்டும் தமிழக முதல்வர், கடந்த 10 நாட்களுக்கு முன்பாக, மின் கட்டண உயர்வு இருக்காது என்பதை தெளிவுபடுத்தச் சொன்னார். அதனை தெளிவுபடுத்தினோம். எனவே, அதே வகையில் தான் பேருந்து கட்டண உயர்வும், நிச்சயமாக அரசு பேருந்து கட்டண உயர்வு இருக்காது,” என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT