Published : 03 Jun 2025 03:08 PM
Last Updated : 03 Jun 2025 03:08 PM

வீராணம் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு: பஞ்சமாதேவியில் தோன்றிய திடீர் நீரூற்று!

வீராணம் குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக விழுப்புரம் அடுத்த பஞ்சமாதேவி பகுதியில் செயற்கை நீர் ஊற்று போல பீய்ச்சி அடிக்கும் தண்ணீர்.

விழுப்புரம்: விழுப்புரம் அருகே வீராணம் குடிநீர் குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டதால் செயற்கை நீர் ஊற்று போன்று தண்ணீர் பீய்ச்சி அடித்தது. கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குழாய் மூலம் நாள்தோறும் 50 முதல் 75 கனஅடி குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக 235 கி.மீ, தொலைவுக்கு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் வசிக்கும் மக்களின் குடிநீர் தாகத்தை தணிக்கும் வகையில், இக் கூட்டு குடிநீர் திட்டம் கடந்த 2004-ம் ஆண்டு முதல் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், விழுப்புரம் அடுத்த பஞ்சமாதேவி (விக்கிரவாண்டி - கும்பகோணம் சாலை) கிராமம் மெயின் ரோடு அருகே உள்ள வீராணம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் நேற்று திடீரென உடைப்பு ஏற்பட்டது.

இதனால், குழாயில் இருந்து செயற்கை நீர் ஊற்று போன்று சுமார் 200 அடிக்கும் கூடுதலாக வானத்தை நோக்கி தண்ணீர் பீய்ச்சி அடித்தது. இதனால், அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் குளமாக மாறியது. தண்ணீர் தொடர்ந்து வெளியேறுவதை அறிந்து இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் அங்கு திரண்டு வந்தனர். ஆடிப்பாடி குளித்து மகிழ்ந்தனர்.

அவ்வழியாக, பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் சென்ற வர்கள், விண்ணை நோக்கி ஏவுகணை போல் பாய்ந்த நீரைப் பார்த்து வியந்தனர். மின்கம்பி மீதும் இந்த தண்ணீர் பட்டதால், உடனே அப்பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்பட்டது.

சீரமைப்பு பணியை மேற்கொள்ள, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கடலூர் மாவட்டம் கொள்ளுகாரன்குட்டை பகுதியில் உள்ள நீரேற்று மையத்தில் இருந்து தண்ணீர் வெளியேறுவதை நிறுத்தி, குழாயில் ஏற்பட்டுள்ள பழுதை சீரமைக்கும் பணியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், சென்னைக்கு வழங்கப்படும் குடிநீர் சேவை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x