Published : 03 Jun 2025 03:02 PM
Last Updated : 03 Jun 2025 03:02 PM
திருப்பூர்: மத்திய அரசின் பேனர் அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பாஜகவினர் இன்று (ஜுன் 3) முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அலுவலகத்துக்கு உள்ளே செல்ல போலீசார் அனுமதி மறுத்ததால் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த வாரம், மே.30ம் தேதி மாதாந்திர மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த முகாமின் போது மத்திய அரசு சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனரானது கூட்டம் நடக்கும் பொழுது அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்தும், இதற்கு மாவட்ட ஆட்சியர் உரிய பதிலளிக்க வலியுறுத்தியும் திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சீனிவாசன் தலைமையில், 100-க்கும் மேற்பட்ட பாஜகவினர் ஆட்சியார் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டனர்.
இதனிடையே, அவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி 5 பேரை மட்டும் உள்ளே செல்ல அனுமதி வழங்குவதாக கூறியதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர் அனைவரையும் உள்ளே அனுமதிக்க வேண்டும் எனக் கூறி ஆட்சியர் அலுவலகத்திற்குள் செல்ல முயன்றனர். மேலும், ஆட்சியர் அலுவலகம் திமுகவினருக்கு மட்டும் சொந்தமானதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் கூட்டத்தில் லேசான சலசலப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து போலீஸார் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்ததை தொடர்ந்து ஆட்சியர் அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து பாஜகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் பேனர் அகற்றப்பட்ட விவகாரத்துக்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தங்களிடம் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சற்று நேரம் பரபரப்பாக காணப்பட்டது. இதனிடையே, அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீஸார் ஆட்சியர் அலுவலகத்தில் குவிக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT