Published : 03 Jun 2025 02:50 PM
Last Updated : 03 Jun 2025 02:50 PM

வேதாரண்யத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வரும் இடம் கல்வி நிறுவனத்துக்குச் சொந்தமானது: ஐகோர்ட்

சென்னை: வேதாரண்யத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வரும் இடம் கஸ்தூரிபா கன்யா குருகுல கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமானது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேதாரண்யம் கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலத்துக்கு சொந்தமான இடத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்டப்பட்டதாக அக்கல்வி நிறுவனம் சார்பில் அதன் நிர்வாக அறங்காவலர் சொக்கலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சொக்கலிங்கம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த மேல்முறையீடு வழக்கு இன்று (ஜூன் 3) நீதிபதி அனிதா சுமந்த் , குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், "பேருந்து நிலையம் கட்டப்படும் நிலம் கல்வி நிறுவனத்துக்கு சொந்தமானது. பொது மக்களின் பயன்பாட்டுக்காக பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருவதால், 2013 நில எடுப்பு சட்டபடி உரிய நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

அதே வேளையில், நிலத்தை அரசு அதிகாரிகள் கையகப்படுத்துவதற்கு முன்பு, தகுந்த நஷ்டஈடு தொகையை கல்வி நிறுவனத்துக்கு வழங்கிய பின்னர் பேருந்து நிலைய கட்டுமானப் பணியை தொடரலாம்" என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். 2013 நில எடுப்பு சட்டபடி அரசு, கல்வி நிறுவனத்துக்கு மூன்று மடங்கு நஷ்டஈடு தொகையை வழங்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x