Published : 03 Jun 2025 02:45 PM
Last Updated : 03 Jun 2025 02:45 PM
புதுச்சேரி: அங்கன்வாடியில் தினமும் முட்டை, சிறுதானிய சுண்டல், மாதம் இரு முறை சத்துமாவு தர முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஊதியமும் உயர்கிறது. மொத்தம் ரூ. 12 கோடி நலத்திட்டங்களுக்கு முதல்வர் ரங்கசாமி ஒப்புதல் தந்துள்ளார்.
புதுவை மாநிலத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் நல திட்ட வழிகாட்டுதல் குழு கூட்டம் முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடந்தது. அமைச்சர் தேனீ ஜெயகுமார், ஆட்சியர் குலோத்துங்கன், சார்புச் செயலர் (நிதி) ரத்னகோஷ் கிஷோர் சவுரே, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இயக்குநர் முத்துமீனா, குழு அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் விவரம்: மத்திய அமைச்சகத்தின் வழிக்காட்டுதலின்படி 6 மாதம் முதல் 3 வயது வரை உள்ள குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்களுக்கு , தினமும் முட்டை மற்றும் சிறுதானிய சுண்டல், மாதம் இருமுறை சத்துமாவு வழங்குவது.. நகர்புற அங்கன்வாடி மையங்களுக்கு தற்போது வழங்கப்படும் வாடகை கட்டணம் ரூ.3 ஆயிரத்து 250ல் இருந்து ரூ.6 ஆயிரமாகவும், கிராமப்புறங்களுக்கு ரூ.ஆயிரத்து 750ல் இருந்து ரூ.2 ஆயிரமாகவும் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் சமையல் கேஸ் இணைப்பு மற்றும் அடுப்பு வழங்குவது. அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரம் ஒருமுறை சிறுதானிய பிஸ்கட் மற்றும் பருவகால பழங்கள் வழங்குவது. கவுரவ அங்கன்வாடி ஊழியர்களுக்கான ஊதியம் ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.12 ஆயிரமாகவும், உதவியாளர்களுக்கு ரூ.4 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாகவும், உயர்த்தி வழங்குவது.
அங்கன்வாடி பயிற்சியாளர்களுக்கு கவுரவ ஊதியம் ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாகவும் உயர்த்துவது, காய்கறி மற்றும் எரிவாயு தொகை உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஒருங்கிணைந்த குழந்தைகள் நல திட்டத்திற்கு தற்போது ஆண்டுக்கு ரூ.18 கோடியை மகளிர் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை வாயிலாக அரசு செலவிட்டு வருகின்றது. இந்த அறிவிப்புகளால் கூடுதலாக ரூ. 12 கோடி செலவாகும்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT