Published : 03 Jun 2025 06:25 AM
Last Updated : 03 Jun 2025 06:25 AM
சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், பூந்தமல்லி – பரந்தூர் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்புக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கிமீ தொலைவில் மாதவரம் - சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி பணிமனை, மாதவரம் – சோழிங்கநல்லூர் வரை பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன. அனைத்து பணிகளையும் 2028-ம் ஆண்டில் முடிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே, புதியதாக பரந்தூரில் அமைய உள்ள விமான நிலையத்தை இணைக்கும் வகையில், புதிய மெட்ரோ ரயில் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இது, இரண்டாம் கட்டத்தில் நடக்கும், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி மெட்ரோ திட்டத்தில், பரந்தூர் வரை 53 கிமீ மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க விரிவான திட்ட அறிக்கையை கடந்த மார்ச் மாதம் 12-ம் தேதி தமிழக அரசிடம் மெட்ரோ ரயில் நிறுவனம் சமர்பித்தது.
இதற்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்து நேற்று அரசாணை வெளியிட்டது. முதல்கட்டமாக, பூந்தமல்லி – சுங்கவார்சத்திரம் வரையில் 27.9 கிமீ தொலைவு மெட்ரோ ரயில் திட்டம் ரூ.8,779 கோடியில் அமைக்கப்படும். மத்திய, மாநில அரசின் பங்களிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் நடக்கும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை அடுத்து, விமான நிலையம் - கிளாம்பாக்கம், பூந்தமல்லி - பரந்தூர், கோயம்பேடு – ஆவடி ஆகிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதையடுத்து, மத்திய அரசின் ஒப்புதலை பெற்று, இந்த திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும். மெட்ரோ ரயில்களின் சேவை விரிவாக்கம் வாயிலாக, பொதுமக்கள் பொது போக்குவரத்து பயன்படுத்துவது அதிகரிக்கும். மேலும், சென்னையின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு மெட்ரோ ரயில் போக்குவரத்து பெரிய பங்களிப்பாக இருக்கும்.
பூந்தமல்லி – பரந்தூர் மெட்ரோ விரிவாக்க திட்டத்துக்கு, மத்திய அரசு ஒப்புதல் கிடைத்தவுடன், நிறுவனம் தேர்வு செய்து முதல்கட்டமாக, பூந்தமல்லி – சுங்கவார்சத்திரம் இடையே மெட்ரோ பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT