Published : 03 Jun 2025 05:18 AM
Last Updated : 03 Jun 2025 05:18 AM
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் சுகாதார பிரச்சனைகளை தீர்க்கவும், புத்தொழில் நிறுவனங்கள் ஒன்று கூடும் சூழலை உருவாக்கவும் ஷைன் ஹெல்த்கேர் ஹேக்கத்தான்”– 2025 என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு புத்தொழில் (ம) புத்தாக்க இயக்கம் (Startup TN) இணைந்து “ஷைன் ஹெல்த்கேர் ஹேக்கத்தான்”– 2025 என்ற இணையதளம் தொடக்க நிகழ்வு பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இணையதளத்தை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மருத்துவர் கி.நாராயணசாமி, மருத்துவர் க.சிவசங்கீதா, ஆக்கம் 360 நிறுவனத்தின் நிறுவனர் திருமூர்த்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “தமிழகம் 2030-க்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைவதற்கான நோக்கில், சுகாதாரத்துறையில் அதிநவீன புதுமையான தீர்வுகளை உருவாக்கும் முன்முயற்சி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, “ஷைன் ஹெல்த்கேர் ஹேக்கத்தான்”– 2025 இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இம்முயற்சியின் நோக்கம் என்பது தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகள் மூலம் சுகாதார பிரச்சனைகளை தீர்க்க புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் நிபுணர்கள் ஒன்று கூடும் சூழலை உருவாக்குவதாகும்.
இந்த ஹேக்கத்தான் ஸ்டார்ட்அப்பில், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்கலாம். இது, மருத்துவ சாதனங்கள், புதிய தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் ஹெல்த் மற்றும் தொலைமருத்துவம், பயோடெக், மருந்தியல் கண்டுபிடிப்புகள் மற்றும் மனநல ஆரோக்கிய தீர்வுகள் போன்ற துறைகளில் புதுமைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியாவின் புகழ்பெற்ற அரசு மருத்துவ பல்கலைக்கழகங்களில் ஒன்றான தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், மருத்துவக் கல்வி மற்றும் நடைமுறைகளை ஒருங்கிணைத்து தர உயர்த்தும் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் கீழ் செயல்படும் தமிழக ஸ்டார்ட்அப், தமிழகத்தில் புத்தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், புதுமை சூழலை வலுப்படுத்துவதற்கும் உறுதியாக அமைந்துள்ளது” என்றார்.
துணைவேந்தர் நாராயணசாமி கூறுகையில், “எதிர்காலத்தில் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க தொழில்நுட்பத்தை ஏற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 800-க்கும் மேற்பட்ட மருத்துவம் மற்றும் துணை மருத்துவக் கல்வி நிறுவனங்களுடன் இணைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம், அரசு கல்வி மற்றும் ஸ்டார்ட்அப் துறைகளின் பங்குபற்றுதலை ஒருங்கிணைத்து, உண்மையான சுகாதார சவால்களை தீர்க்கும் மாற்றத்துக்கான ஹேக்கத்தான் முயற்சியை முதன்முறையாக தொடங்கியுள்ளது” என்றார்.
தமிழக ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் கூடுதல் துணை தலைவர் ஆர்.மகேஸ்வர், இந்த ஹேக்கத்தானின் தேவையையும், அதன் மூலம் நிறைவேற்ற வேண்டிய முக்கிய நோக்கங்களையும் விளக்கினார். மற்றொரு துணைத் தலைவர் சிவகுமார் பழனிசாமி, சுகாதார சேவைகள், டிஜிட்டல் நவீனத்துவத்தின் பயன்பாடுகள் மற்றும் அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப் துறைகளுக்கிடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை பகிர்ந்து கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT