Published : 03 Jun 2025 05:47 AM
Last Updated : 03 Jun 2025 05:47 AM
சென்னை: சிறைத்துறை முதல்நிலை காவலர்கள் பணியிட மாற்ற உத்தரவை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் பல்வேறு சிறைகளில் பணிபுரிந்து வந்த 150 முதல்நிலை சிறைத்துறை காவலர்களை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திமுக அரசு பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதால், சிறைத்துறை காவலர்கள் பணிபுரியும் பகுதிக்கு அருகே தங்களது பிள்ளைகளை சேர்த்து கட்டணம் செலுத்திவிட்ட நிலையில், திடீரென காவலர்களை இடமாற்றம் செய்திருப்பது கண்டனத்துக்குரியது.
பொது கலந்தாய்வு ஏதுமில்லாத இந்த இடமாற்ற உத்தரவு மூலம், காவலர்களை மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தையும் திமுக அரசு தண்டித்துள்ளது. இடமாற்றம் செய்யப்படும் முன்பு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பதவி உயர்வை வழங்கி, காலிப்பணியிடங்களை கணக்கிட்டு, கலந்தாய்வு நடத்தி காவலர்களின் விருப்பங்களை கேட்டறிந்து இடமாற்றம் செய்யப்பட வேண்டும். இதுவே நடைமுறை.
அவற்றில் எதையும் பின்பற்றாமல், காவலர்கள் பொது கலந்தாய்வு மூலம் தங்களுக்கு விருப்பமான இடங்களை கண்டறியும் வாய்ப்பை தட்டிப்பறித்திருப்பது கொடுமையாகும். இதனால் காவலர்கள் பொருளாதார நெருக்கடியையும், குடும்பத்தை பிரிகின்ற மனஉளைச்சலையும் அடைவார்கள் என்பது அரசுக்கு தெரியாதா? எனவே பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் சூழலை கருத்தில்கொண்டு சிறைத்துறை காவலர்களுக்கான பணியிட மாற்ற உத்தரவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT