Published : 03 Jun 2025 05:40 AM
Last Updated : 03 Jun 2025 05:40 AM

திருவிழாக்கள் இல்லாத 6 மாதங்களுக்கு நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரணம்

கோப்புப்படம்

திருநெல்வேலி: தமிழகத்தில் கோயில் திருவிழாக்கள் இல்லாத காலங்களில் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், அவர்களுக்கு 6 மாதம் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக, நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத் தலைவர் வாகை சந்திரசேகர் தெரிவித்தார்.

நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தின் திருநெல்வேலி மண்டல அளவிலான உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற வாகை சந்திரசேகர் கூறியதாவது:

திருநெல்வேலி மண்டலத்திலுள்ள 5 மாவட்டங்களைச் சேர்ந்த 371 கலைஞர்களுக்கு ரூ. 13.17 லட்சம் மதிப்பில் நிதியுதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டுப்புற, நாடக மற்றும் திரைப்பட கலைஞர்களுக்காக பெருமளவு நிதி ஒதுக்கி, அவர்களது தேவைகளை தமிழக முதல்வர் பூர்த்தி செய்து வருகிறார். மாவட்டம் வாரியாக கலைஞர்களை நேரடியாக சந்தித்து, அவர்களது குறைகளை சரி செய்யும் பணி நடந்து வருகிறது. மாவட்ட அளவிலான அரசு விழாக்களில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கி, சிறந்த ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களில் காலியாக உள்ள நாதஸ்வர மற்றும் தவிலிசை கலைஞர்களுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு, இயல் இசை நாடக மன்றம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. தமிழ்நாடு இசைப் பள்ளியில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களே பயிற்சியாளர்களாக நியமிக்கப்படுவர் என்ற அரசாணையை திருத்தி அமைக்கவும், வயது வரம்பை குறைக்கவும், நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தின் சார்பில் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோயில் திருவிழாக்கள் நடைபெறும் 6 மாதங்களுக்கு மட்டுமே நாட்டுப்புற இசை கலைஞர்களுக்கு பணி இருக்கும். பணி இல்லாத மீதமுள்ள 6 மாதங்களுக்கு அவர்களது வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கோயில் திருவிழாக்களில் நாடகங்கள், தெருக்கூத்துக்கள் நடத்துவதற்கான, போலீஸ் கட்டுப்பாடுகளை தளர்த்த கோரி அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வரும் நாட்களில் திருவிழாக்கள் அதிகம் நடைபெறும் என்பதால், ஒரு மாதத்துக்குள் அந்த தளர்வுகளை ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், திருநெல்வேலி ஆட்சியர் ஆர்.சுகுமார், அப்துல்வகாப் எம்எல்ஏ, மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x