Published : 03 Jun 2025 12:30 AM
Last Updated : 03 Jun 2025 12:30 AM
தமிழகத்தில் மழை வாய்ப்பு குறைந்துள்ள நிலையில், வெப்பநிலை மீண்டும் உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த 24-ம் தேதி தொடங்கியது. இதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. வானமும் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பநிலையும் குறைந்தது. எங்கும் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது மழை வாய்ப்பு குறைந்துள்ளதால், வெப்பநிலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 8-ம் தேதி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேநேரம், இன்றும், நாளையும் (மே 3, 4) ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை ஒட்டி இருக்கக்கூடும்.
தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் சந்தியூரில் 4 செ.மீ., திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், நத்தம், சிவங்கை மாவட்டம் சிங்கம்புணரி, நாமக்கல் மாவட்டம் மங்களபுரத்தில் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT