Published : 02 Jun 2025 08:46 PM
Last Updated : 02 Jun 2025 08:46 PM
விழுப்புரம்: “பாமகவில் அனைத்து அதிகாரங்களும் கட்சியின் நிறுவனர் ராமதாசிடம் மட்டுமே உள்ளது” என அக்கட்சியின் முன்னாள் தலைவரும், பேராசிரியருமான தீரன் கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் ராமதாஸை, பேராசிரியர் தீரன் இன்று (ஜூன் 2) சந்தித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “பாமக மகளிர் மாநாடு, பூம்புகாரில் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி நடத்தப்படும் என நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளோம். பாமக தலைவராக ஒரு எம்பிசி வகுப்பை சேர்ந்தவரும், பொதுச் செயலாளராக ஒரு பட்டியலினத்தை சேர்ந்தவரும், பொருளாளராக சிறுபான்மையினரும் இருக்க வேண்டும் என்பது பாமக கட்சியின் சட்ட விதிகளாகும்.
அதன்படிதான், பொருளாளராக மன்சூர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஏற்கெனவே மாநில பொருளாளராக சிறப்பாக செயல்பட்டுள்ளார். கட்சிக்கு நிதி திரட்டி கொடுத்துள்ளார். திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் கட்சியின் வளர்ச்சிக்கு, மன்சூரின் பங்களிப்பு சிறப்பாகவே இருந்தது. இதனால், பொருளாளர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் நீக்கம், சேர்க்கை என்பது கிடையாது. ராமதாசை அனைவரும் சந்தித்து வருகின்றனர்.
2026-ல் நடைபெறக் கூடிய தேர்தலில் பாமக வெற்றியை நோக்கி செல்ல வேண்டும் என ராமதாஸ் மற்றும் அன்புமணியிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதற்கான சூழ்நிலையும் கனிந்து வருகிறது. இந்த பிரச்சினைகள் எல்லாம் கொஞ்ச நாளில் சரியாகிவிடும் என ராமதாஸும் கூறுகிறார். பாமகவின் அமைப்பு விதிகளை வகுத்தவர்களில் நானும் முக்கியமானவர். பாமக தலைவர் உட்பட அனைத்து பொறுப்புகளிலும் உள்ளவர்கள், நிறுவனர் ராமதாஸ் வழிகாட்டுதலின் பேரில் செயல்பட வேண்டும் என தெளிவாக கூறப்பட்டுள்ளது.
அமல்படுத்தும்போது, பொதுச் செயலாளர் மூலம் செயல்படுத்தப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே என்பதுபோல் பாமக சட்டவிதிகளின்படி, அனைத்து அதிகாரங்களும் ராமதாஸிடம் உள்ளது. ராமதாஸ் வழிகாட்டுதலின் படிதான் செயல்படுவோம், அவரது கொள்கைகளைப் பின்பற்றுவோம் என செயல் தலைவர் அன்புமணியும் கூறி வருகிறார். கட்சியில் செயல்படாத நிர்வாகிகளை மட்டுமே ராமதாஸ் நீக்கி வருகிறார்.
ராமதாஸ் கைக்காட்டும் நபர்களை ஏற்றுக்கொண்டு, 2026-ல் நடைபெறக்கூடிய தேர்தலில் பணியாற்றுவோம். ராமதாஸ், அன்புமணி இருவரையும் ஏற்றுக் கொண்டவர்கள்தான், கட்சியின் தொண்டர்கள் மற்றும் பொறுப்பாளர்களாக இருப்பார்கள். தனி அணி என அன்புமணி கூறுவது அவரது கருத்தாக இருக்கலாம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT