Published : 02 Jun 2025 06:50 PM
Last Updated : 02 Jun 2025 06:50 PM
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறைந்தபட்சம் 30 ஆண்டுகளுக்கு அவருக்கு எந்த தண்டனை குறைப்பும் செய்யக் கூடாது என்று நீதிபதி ராஜலட்சுமி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
புழல் சிறையில் இருந்த ஞானசேகரனை போலீஸார் இன்று (ஜூன் 2) மகளிர் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர், தண்டனை விவரங்களை நீதிபதி ராஜலட்சுமி அறிவித்தார். 207 பக்க விரிவான தீர்ப்பை நீதிபதி வழங்கினார். பிஎன்எஸ் (பாரதிய நியாய சன்ஹிதா) சட்டத்தின்படி ஞானசேகரன் மீது குற்றம்சாட்டப்பட்ட 11 பிரிவுகள் மற்றும் அதற்கான தண்டனை விவரம்:
> விருப்பத்துக்கு மாறாக அத்துமீறி நடத்தல் (பிரிவு 329) - 3 மாத சிறை.
> செல்ல விடாமல் தடுத்து நிறுத்துதல் (126-2) - 1 மாத சிறை.
> வலுக்கட்டாயமாக கடத்தி சென்று ஆசைக்கு இணங்க வைத்தல் (87) - 10 ஆண்டு சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம்.
> காயம் ஏற்படுத்துதல் (127-2) - 1 ஆண்டு சிறை.
> விருப்பத்துக்கு மாறாக பாலியல் வன்கொடுமை செய்தல் (75-2) - 3 ஆண்டு கடுங்காவல் சிறை.
> கடுமையாக தாக்குதல் (76) - 7 ஆண்டு சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம்.
> மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தல் (64-1) - ஆயுள் தண்டனை. இதில் குறைந்தபட்சம் 30 ஆண்டுகளுக்கு அவருக்கு எந்த தண்டனை குறைப்பும் செய்ய கூடாது. ரூ.25 ஆயிரம் அபராதம்.
> கொலை மிரட்டல் விடுத்தல் (351-3) - 7 ஆண்டு சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம்.
> வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை அழித்தல் (238-பி) - 3 ஆண்டு சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம்.
> தனிநபர் அந்தரங்க உரிமைகளை மீறி வீடியோ, புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டுதல் (தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66-இ) - 3 ஆண்டு சிறை, ரூ.25 ஆயிரம் அபராதம்.
> தமிழ்நாடு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு 4. பாலியல் குற்றச்சாட்டுக்கான பிரிவில் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், மேற்கண்ட பிரிவில் தண்டனை விதிக்கப்படவில்லை.
மொத்த அபராத தொகை ரூ.90,000-ஐ பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க வேண்டும். அபராதம் செலுத்த தவறினால், மேலும் 18 மாதங்கள் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும். இந்த தண்டனைகள் அனைத்தையும் அவர் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
மேலும், ‘கடந்த 2010 முதல் தற்போது வரை இந்த வழக்கு இல்லாமல் 37 குற்ற வழக்குகள் ஞானசேகரன் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 5 வழக்குகளில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சில வழக்குகளில் மட்டும் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பல வழக்குகள் விசாரணை நிலையில் உள்ளன. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவருக்கு கருணை காட்ட முடியாது. எனவே, பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது.
அதேபோல, பாதிக்கப்பட்ட பெண்ணை ஏமாற்றும் நோக்கில், தானும் பல்கலைக்கழக ஊழியர் என்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தி திசைதிருப்பவும், மிரட்டுவதற்காகவும் ‘சார்’ என்ற வார்த்தையை ஞானசேகரன் பயன்படுத்தினார் என்பது அறிவியல்பூர்வமாகவும், நேரடி சாட்சிகள் மூலமாகவும் தெரியவந்துள்ளது. எனவே, இந்த வழக்கில் அவர் ஒருவர் மட்டும்தான் குற்றவாளி என்ற அரசு தரப்பு வாதத்தை இந்த நீதிமன்றம் முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறது.
அதேபோல, பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்களை கசியவிட்ட காரணத்துக்காக அந்த பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டது. தற்போது அபராத தொகை ரூ.90 ஆயிரத்தை அந்த பெண்ணுக்கு வழங்க இந்த நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. இதுதவிர, கூடுதல் இழப்பீடு வழங்குவது தொடர்பாக சட்ட பணிகள் ஆணை குழு உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படுகிறது’ என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நடந்தது என்ன? முன்னதாக, சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கடந்த 2024 டிசம்பரில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் டிசம்பர் 24-ம் தேதி புகார் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கோட்டூர்புரத்தை சேர்ந்த டி.ஞானசேகரன் (37) என்பவரை போலீஸார் மறுநாள் 25-ம் தேதி கைது செய்தனர்.
இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் பெண் ஐபிஎஸ் அதிகாரிகளான சினேகப்பிரியா, ஐமால் ஜமான், பிருந்தா ஆகியோரை கொண்ட தனிப்படை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டது. இந்த சிறப்பு புலனாய்வு குழு கடந்த பிப்ரவரியில் ஞானசேகரனுக்கு எதிராக சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
பின்னர், இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்துக்கு கடந்த மார்ச் 7-ம் தேதி மாற்றப்பட்டது. மகளிர் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) எம்.ராஜலட்சுமி முன்பு வழக்கு விசாரணை நடந்தது. அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் எம்.பி.மேரி ஜெயந்தியும், கைதான ஞானசேகரன் தரப்பில் சட்ட பணிகள் ஆணை குழு தரப்பு வழக்கறிஞர்கள் கோதண்டம், ஜெயப்பிரகாஷ் நாராயணனும் ஆஜராகி வாதிட்டனர். இந்த வழக்கில் மொத்தம் 29 அரசு தரப்பு சாட்சிகள், 75 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இரு தரப்பிலும் வாதங்கள் கடந்த மே 20-ம் தேதியுடன் நிறைவடைந்தது. ஞானசேகரன் மீது சுமத்தப்பட்ட 11 பிரிவுகளிலும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவரை குற்றவாளி என அறிவித்து நீதிபதி ராஜலட்சுமி கடந்த மே 28-ம் தேதி தீர்ப்பளித்தார். தண்டனை விவரம் ஜூன் 2-ம் தேதி (நேற்று) அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். அதன்படி, தற்போது தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT