Published : 02 Jun 2025 06:04 PM
Last Updated : 02 Jun 2025 06:04 PM
மதுரை: ‘உரிமையாளர்’ இன்னும் பொதுப் பணித் துறை பெயரிலேயே உள்ளதால் மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 16 மழைநீர் கால்வாய்களை மாநகராட்சி நிர்வாகம் பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, கால்வாய்களை தங்கள் பெயருக்கு எழுதி தர மாநகராட்சி கடிதம் எழுதி ஓர் ஆண்டுக்கு மேலாகியும், இன்னும் பொதுப் பணித் துறை பதில் அளிக்காமல் உள்ளதால், கால்வாய்களை பராமரிப்பு 16 ஆண்டாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி 100 வார்டுக்குட்பட்ட பகுதிகளில் 16 மழைநீர் கால்வாய்கள் 44.23 கி.மீ. தூரம் செல்கின்றன. இந்த கால்வாய்கள் அனைத்தும் பொதுப் பணித் துறை வசம் உள்ளன. கடந்த 50 ஆண்டுக்கு முன்பு வரை, இந்த கால்வாய்கள் அனைத்தும், பாசன கால்வாய்களாக இருந்துள்ளன. இந்த கால்வாய்களை கொண்டு தற்போது அறியப்படும் மாநகரப் பகுதியில் இருந்த 8,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதிப் பெற்றன. நெல், வாழை, கரும்பு, காய்கறி போன்ற பல்வேறு விவசாயப் பணிகள் நடந்து வந்தன.
காலப்போக்கில் மாநகராட்சிப் பகுதியில் மக்கள் நெருக்கம் அதிகரிக்கவும், மாநகரப் போக்குவரத்து வசதிக்காகவும், கண்மாய்களை அழித்து அரசு கட்டிடங்கள் கட்டப்பட்டன. விவசாய நிலங்கள் குடியிருப்புகளாக மாறியதால் இந்த பாசனக் கால்வாய்கள், காலப்போக்கில் நகர் பகுதி சாலைகள், குடியிருப்புகளில் பெய்யும் மழைநீரை கடத்தும் மழைநீர் கால்வாய்களாகவும், மற்ற காலங்களில் கழிவுநீரை கடத்தும் கழிவுநீர் கால்வாய்களாகவும் உருமாறின. இந்த கால்வாய்களை பராமரிக்காமல் பொதுப்பணித் துறை நிரந்தரமாக ‘கை’விடப்பட்டதால், மழைக் காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வானப் பகுதி குடியிருப்புகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
இது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறுகையில், "கடந்த காலத்தில் இந்த 16 மழைநீர் கால்வாய்கள், பாசன கால்வாய்களாக பாசனத்துக்கு பயன்பட்டதால் அவற்றை பராமரித்தோம். தற்போது அவை பாசன கால்வாய்களாக இல்லை. கழிவுநீரை கலக்கவிடும், குப்பைகளை கொட்டும் மாநகராட்சிதான் பராமரிக்க வேண்டும். அவர்கள் கடந்த 2008-ம் ஆண்டு, மாநகராட்சிப் பகுதியில் உள்ள மழைநீர் கால்வாய்களை நாங்களே பராமரித்துக் கொள்கிறோம் என்று எங்களிடம் தடையில்லா சான்று வாங்கியுள்ளனர். கடந்த காலத்தில் அரசிடம் சிறப்பு நிதி பெற்றுதான் அதனை பராமரித்து வந்துள்ளனர். பாசனக் கால்வாய்களாக இல்லாததால் அவற்றை பராமரிக்க எங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை" என்ற அதிகாரிகள் கூறினர்.
இதனிடையே, மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ”16 மழைநீர் கால்வாய்களில் ஒன்று கூட எங்களுக்கு சொந்தமானது இல்லை. அனைத்துமே பொதுப்பணித் துறைக்கு சொந்தமானது. அவர்கள்தான் உரிமையாளர்கள். கடைசியாக 2008-ம் ஆண்டு ஜவஹர்லால் நேரு நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.200 கோடி மாநகராட்சி சிறப்பு நிதி பெற்று, அப்போதைக்கு மட்டுமே இந்த மழைநீர் கால்வாய்களை தூர்வாரி கான்கிரீட் தளம் அமைக்க பொதுப்பணித் துறையிடம் தடையில்லா சான்று பெற்று பணிகள் மேற்கொண்டோம்.
ஆணையாளராக தினேஷ்குமார் இருந்தபோது, நாங்களே இந்த கால்வாய்களை பராமரித்துக் கொள்கிறோம் என்று கடிதம் பொதுப்பணித் துறைக்கு வழங்கியிருந்தோம். ஆனால், அவர்கள் எங்களிடம் ஒப்படைக்க முன்வரவில்லை. மழைக்காலத்தில் மக்கள் நலன் கருதி, குப்பைகளை அகற்றி கால்வாய்களை சுத்தப்படுத்துகிறோம்.
ஒன்று, இந்த கால்வாய்கள் அனைத்தையும் அவர்கள் பராமரிக்க வேண்டும் அல்லது அவற்றை மாநகராட்சிக்கு பெயருக்கு மாற்றி எழுதி கொடுத்தால் நாங்கள் பராமரிக்கிறோம், இவை இரண்டையும் அவர்கள் செய்ய முன்வரவில்லை. மழைக் காலத்தில் நகர்பகுதி மழைநீர் மட்டுமே அதில் செல்வதில்லை. சாத்தையாறு அணையில் இருந்து வரும் தண்ணீர், அந்த அணைக்கு கீழ் உள்ள கண்மாய்கள், நகர்பகுதி கண்மாய்கள் நிரம்பி வெளியேறும் உபரி நீர், இந்த மழைநீர் கால்வாய்களில் வருகிறது” என்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுரை வந்த முதல்வர் ஸ்டாலின், பந்தல்குடி மழைநீர் கால்வாயை பார்வையிட்டு, அதனை தூர்வார மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியுள்ளார். முதல்வரே தலையிட்டுள்ளதால், இனியாவது மாநகராட்சிக்குடப்பட்ட 16 மழைநீர் கால்வாய்களின் ‘உரிமையாளர்’ பிரச்சனை முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT