Published : 02 Jun 2025 06:01 PM
Last Updated : 02 Jun 2025 06:01 PM
விருதுநகர்: “இந்தியா முழுவதும் ரயில்களில் பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. சாதாரண மனிதர்கள் பயன்படுத்தி வரும் ரயில்வே, பணக்காரர்களுக்காக மாற்றப்படுகிறது,” என்று மாணிக்கம் தாகூர் எம்.பி குற்றம் சாட்டியுள்ளார்.
விருதுநகரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: “ஞானசேகரன் வழக்கு விரைவாக முடிக்கப்பட்டதற்கு நீதித்துறைக்கும் சட்டத்துறைக்கும் பாராட்டுக்கள். கடுமையான தண்டனை விதித்து பெண்களின் பாதுகாப்புக்கு இந்த தீர்ப்பு எடுத்துக்காட்டாக உள்ளது. டெல்லியில் யமுனை ஆற்றங்கரையில் மதராசி காலனி என்பது சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் குடியேறிய தமிழர்களின் வீடுகளை பாஜக அரசு அமைந்த பிறகு அவசர அவசரமாக இடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆம்ஆத்மி இருந்தாலும், காங்கிரஸ் கட்சி இருந்தாலும் சரி நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பல ஆண்டுகளாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், ஆம்-ஆத்மி கட்சி இருக்கும்போது ஓராண்டுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வந்தது. அதன் அடிப்படையில் தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெல்லி அரசு இதற்காக உச்ச நீதிமன்றத்துக்கு சென்றிருக்க வேண்டும்.
டெல்லி பாஜக அரசு தமிழர்கள் மீது எந்த அக்கறையும் கொள்ளாத அரசு என்பதை மீண்டும் ஒரு முறை காட்டியுள்ளது. பாஜகவை தமிழக விரோத அரசு என்பதற்கு எடுத்துக்காட்டாக இதைக் கூற முடியும். தமிழக அரசு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் என அறிவித்துள்ளது. வரும் தேர்தலில் திராவிட கட்சிகள் பணத்தை வாரி இரைப்பார்கள் என்று விஜய் பேசியுள்ளார். தமிழக மக்கள் சாதாரண மானவர்கள், பணத்துக்காக மக்கள் விலைபோவார்கள் என்பது போன்று அவர் பேசுவது நியாயமாக இருக்காது.
தமிழக மக்களின் மனம் என்பது செயல்பாட்டின் அடிப்படையில் உள்ளதே தவிர பணத்தின் அடிப்படையில் கிடையாது. யாருக்கு வாக்களிப்பது என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். இண்டியா கூட்டணி பலமாக உள்ளது. தமிழக முதல்வர் மக்களுக்கு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். அதைக் கூறி மக்களிடம் வாக்கு கேட்போம். ‘ஆபரேஷன் சிந்தூர்’ யார் கூறியதால் நிறுத்தப்பட்டது? பிரதமர் மோடி ஏன் திடீரென போரை நிறுத்தினார்?. நான் கூறித்தான் போர் நிறுத்தப்பட்டது என அமெரிக்காவிலிருந்து 11-வது முறையாக ட்ரம்ப் கூறுகிறார்.
இதுபற்றி ஏன் தமிழிசையும், பிரதமர் மோடியும் வாய்திறக்க மறுக்கிறார்கள்?. இதைப் பற்றி பேசாமல் ‘ஆபரேஷன் சிந்தூர்’ வீரர்களின் வெற்றியால் உருவானது. மூவர்ண கொடியேந்தி தமிழக முதல்வர் தலைமையில் வீரர்களை பாராட்டி பேரணி நடத்தப்பட்டது. ஏன் போரை நிறுத்தினார்கள்?. அமெரிக்கா கூறி போரை நிறுத்தினார்களா?, யாருக்கு பயந்து இதை செய்தார்களா? என்பதற்கான பதிலை மட்டும் மோடி கூறு மறுக்கிறார்.
தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில் பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவது மிகவும் கவலைக்குரிய விஷயம். இதைப் பற்றி நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் குரல் எழுப்பியுள்ளோம். இந்தியா முழுவதும் பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. சாதாரண மனிதர்கள் பயன்படுத்தி வரும் ரயில்வே, பணக்காரர்களுக்காக மாற்றப்படுகிறது. தென் மாவட்டத்தில் குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி, மதுரை, தூத்துக்குடி, விருதுநகர் ரயில்களுக்கு சாதாரண பெட்டிகள் எண்ணிக்கை குறைக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.
இதுதொடர்பாக ரயில்வே துறை அமைச்சரிடமும், நாடாளுமன்றத்திலும் கேள்வி எழுப்புவோம். மதுரை- அருக்கோட்டை- தூத்துக்குடி ரயில்வே திட்டத்தை மீண்டும் புதுப்பிக்கக்கோரி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். தமிழகத்துக்கு வர வேண்டிய திட்டங்களை பாஜக நிறுத்துவதை தமிழகத்துக்கு செய்யும் துரோகமாக பார்க்கிறோம்.” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT