Published : 02 Jun 2025 05:46 PM
Last Updated : 02 Jun 2025 05:46 PM
மதுரை: மதுரையில் ஜூன் 22-ல் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு தடை விதிக்கக் கோரி, மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் மீ.த.பாண்டியன், வழக்கறிஞர்கள் ஹென்றி திபேன், சே.வாஞ்சிநாதன் ஆகியோர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் இன்று (ஜூன் 2) அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: “திருப்பரங்குன்றம் பிரச்சினையின் தொடர்ச்சியாக ஜூன் 22-ல் மதுரை சுற்றுச்சாலை அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் ‘முருக பக்தர்கள் மாநாடு’ நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டுக்காக சங்க்பரிவார் அமைப்பினர் சிறுபான்மை மக்கள் மீதான வெறுப்பை மிக நுட்பமாக பரப்பும் விதத்தில் பரப்புரைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சங்பரிவார் அமைப்பினர் கடந்த பிப். 4-ல் 144 தடையாணை அமலில் இருந்தபோது பாஜக கொடியை மறைத்து எடுத்துச் சென்று திருப்பரங்குன்றம் கோயிலில் புகுந்து கலவரம் செய்ய முயன்றனர். இது தொடர்பாக திருப்பரங்குன்றம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தும் இதுவரை கலவரம் செய்தவர்களில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.
வட மாநிலங்களில் ராமர் பெயரால் மத வன்முறையை நடத்தி வரும், அதே இயக்கங்கள் ஜூன் 22-ல் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு என்ற பெயரில் மத வெறுப்பை, வன்முறையை விதைக்க தயாராகி வருகின்றனர். மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு இதுவரை போலீஸார் அனுமதி வழங்கவில்லை. இருப்பினும் சங்க்பரிவார் அமைப்பினர் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதை போலீஸார் எப்படி அனுமதிக்கின்றனர்?
மதுரையில் சங்க்பரிவார் அமைப்புகள் நடத்தும் மாநாடு ஆன்மிக மாநாடு அல்ல, ஆன்மிகத்தின் பெயரில் நடத்தப்படும் அரசியல் மாநாடு. எனவே அமைதி பூங்காவான தமிழ்நாடும், மத நல்லிணக்க மாநகரமான மதுரையும் குஜராத், உத்தரப் பிரதேசம் போல் மாறாமல் இருக்கு ஜூன் 22ல் முருக பக்தர்கள் மாநாடு நடத்த தடை விதிக்க வேண்டும்.” என்று அந்த மனுவில் கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT