Published : 02 Jun 2025 06:04 AM
Last Updated : 02 Jun 2025 06:04 AM

நகைக்கடன் மீதான கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்: மத்திய அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை: நகைக்கடன் மீதான கட்டுப்பாடுகளை மத்திய அரசு உடனடியாக நீக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொதுமக்களின் அவசரத் தேவைகளை பூர்த்தி செய்யவும், விவசாயிகள் தங்கள் தொழிலை மேற்கொள்ளவும், கிராமப்புற மேம்பாட்டுக்கும் இன்றியமையாததாக விளங்குவது நகைக்கடன். இதை பெறுவதற்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பாரத ரிசர்வ் வங்கி வகுத்திருப்பது பொதுமக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கத்தை அடமானம் வைக்கும்போது அதன் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே கடன் வழங்கப்பட வேண்டும். அடமானம் வைக்கப்படும் நகைக்கான ஆதாரத்தை நகைக்கடன் பெறுவோர் அளிக்க வேண்டும். தங்க நகைகளில் 22 காரட் அல்லது அதற்கு மேல் இருந்தால் மட்டுமே கடன் வழங்கப்பட வேண்டும். 24 காரட் தங்க நகையாக இருந்தாலும் 22 காரட் மதிப்பிலேயே கடன் வழங்க வேண்டும். ஒரு கிலோ வரையிலான தங்க நகைகள் மட்டுமே அடமானம் வைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு வைக்கப்படும் நகையில் 50 கிராம் மட்டுமே அச்சிடப்பட்ட நாணயங்களாக இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 கட்டுப்பாடுகளை விதித்து அண்மையில் பாரத ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டது. இந்தக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் நகைக் கடன் பெறுவது என்பது எட்டாக் கனியாகிவிடும்.

பொதுவாக நகைக் கடன் பெறுபவர்கள் ஏழையெளிய கிராமப்புற மக்களும், விவசாயிகளும், குறு மற்றும் சிறு தொழில்களை மேற்கொள்பவர்களும்தான். இந்நிலையில், பாரத ரிசர்வ் வங்கியின் நகைக் கடனுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் ரத்து செய்யப்பட வேண்டுமென்று அனைத்துத் தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

தமிழக அரசின் சார்பிலும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இருப்பினும், ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும் சிறிய நகைக் கடனுக்கு மட்டும் விலக்கு அளிக்குமாறு பாரத ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதி அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது என்றாலும், ஏற்கெனவே இருந்த நடைமுறை தொடர்ந்தால் தான் ஏழையெளிய மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். கிராமப்புற பொருளாதாரம் வளர்ச்சி அடையும்.

மூதாதையர்கள் வைத்துவிட்டு போன தங்க நகைகளுக்கு எல்லாம் ஆதாரம் கேட்பது போன்றவை ஏற்றுக் கொள்ள முடியாத நெறிமுறைகளாக இருக்கின்றன. எனவே நகைக் கடன் பெறுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x