Published : 02 Jun 2025 07:48 AM
Last Updated : 02 Jun 2025 07:48 AM
அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமியைக் கூட குறைவாகத்தான் தான் விமர்சித்திருப்பார் ஸ்டாலின். அதைவிட பலமடங்கு அவர் வறுத்தெடுத்தது அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியைத்தான்.
2021 பிப்ரவரியில் கோவைக்கு ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பிரச்சார பயணம் வந்த ஸ்டாலின், “ 'ஊழலாட்சித் துறை' அமைச்சராக இருக்கும் வேலுமணி முன்பு எப்படி இருந்தார்... இப்போது எப்படி இருக்கிறார் என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இல்லை. அவர் ஒரு ஊழல் சாம்ராஜ்யத்தையே இந்த கோவையில் நிறுவி உள்ளார். இதில் அவரது சகோதரர்கள், பினாமிகள் நீங்கலாக யாரும் உள்ளே நுழைய முடியாது. இவர்களின் ஊழல்களைக் கண்டுபிடிக்கும் பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுகிறார்கள்.
திமுக-வின் மாவட்டச் செயலாளர்களும் நிர்வாகிகளும் கைது செய்யப்படுகிறார்கள்; மிரட்டப்படுகிறார்கள். அந்தளவுக்கு கோவையையே குத்தகைக்கு எடுத்துவிட்டது போல் அராஜகம் செய்து கொண்டு இருக்கிறார். உங்கள் அராஜகம் முடிவுக்கு வரும் நாள் நெருங்குகிறது வேலுமணி. திமுக ஆட்சிக்கு வந்ததும் உங்கள் மீது நிச்சயம் ஊழல் வழக்குப் பாயும்” என்று ஆவேசம் குறையாமல் பேசினார்.
ஸ்டாலின் இப்படிப் பேசியதை அதிமுக-வுக்குள்ளும் சிலர் அப்போது ரசித்தனர். அதேபோல் திமுக ஆட்சி அமைந்ததும் வேலுமணிக்கு வேட்டு நிச்சயம் என அவரால் பாதிப்புக்கு உள்ளாகி இருந்த திமுக-வினர் உள்ளிட்ட பலரும் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், அப்படியெல்லாம் எந்த அரசியல் அதிசயமும் நடந்துவிடவில்லை.
ஸ்டாலின் சொன்னது போல வேலுமணி மீது ஊழல் வழக்கைப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், 2021 ஆகஸ்ட் மாதமே கோவையில் உள்ள வேலுமணியின் வீடு உள்ளிட்ட அவர் சம்பந்தப்பட்ட 60 இடங்களில் அதிரடி சோதனைகளை நடத்தி ஆவணங்களை அள்ளினர். சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் நடைபெற்ற டெண்டர்களில் 811 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக அறப்போர் இயக்கமும், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும் அளித்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை எடுத்தது லஞ்ச ஒழிப்புத் துறை.
லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரெய்டுக்கு வரப்போகும் விஷயம் எப்படியோ(!?) முன்கூட்டியே லீக் ஆனதால் ரெய்டு தொடங்கிய சற்று நேரத்தில் வேலுமணியின் ஆதரவாளர்கள் கோவையில் அவரது வீட்டு வாசலில் குவிந்தனர். அவர்களுக்கெல்லாம் ரோஸ் மில்க், டீ, இரண்டு வேளை உணவு உள்ளிட்டவற்றை வழங்கி அந்த இடத்தையே பிக்னிக் ஸ்பாட் ஆக்கி ரெய்டு நடவடிக்கையையே கேலிக்கூத்தாக்கியது வேலுமணி தரப்பு.
ஆனால், இந்த ரெய்டுக்குப் பிறகு வேலுமணி மீது அரசு தரப்பிலிருந்து எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இதோ, நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டது. வேலுமணி முன்பை விட இன்னும் கெத்தாகவே சுற்றிவருகிறார். அண்மைக் காலமாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் பதிவு செய்யும் வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி ரெய்டுகளையும் அரங்கேற்றி வருகிறது.
ஆனால், இதெல்லாம் பாஜக-வை எதிர்க்கும் திமுக உள்ளிட்ட கட்சி பிரமுகர்களுக்கு மட்டும் தான் போலிருக்கிறது என்று கேட்கும் கோவை திமுக-வினர், “அமலாக்கத்துறை உண்மையிலேயே நேர்மையாகச் செயல்படுகிறது என்றால் இந்நேரம் வேலுமணி வீட்டிலும் ரெய்டு நடத்தி அவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்திருக்க வேண்டும். இத்தனைக்கும், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திலேயே ஊழல் செய்திருப்பதாக வேலுமணிக்கு எதிராக புகார் கூறப்பட்டது.
அப்படி இருந்தும் அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை அமலாக்கத் துறை. ஏனென்றால், அதிமுக தலைமையைப் போலவே பாஜக தலைமைக்கும் விசுவாசமாக இருப்பவர் வேலுமணி. இன்னும் சொல்லப் போனால், மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி உருவாக பாலமாக இருந்தவர். இத்தனை ‘மெரிட்’ இருக்கையில் அவரை எப்படித் தொடுவார்கள்?” என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
கட்சி சாரா பொதுநலவாதிகளோ, “கோவை மாவட்டத்தில் திமுக-வுக்கு ஓட்டு வாங்குவதற்கு ஒரு இலக்காக வேலுமணி அப்போது தேவைப்பட்டார். ஆனால், வேலுமணிக்கு எதிராக ஸ்டாலின் அத்தனை தீவிரமாக பிரச்சாரம் செய்தும் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக தான் வெற்றிபெற்றது. அந்த ஆதங்கத்தில் தானோ என்னவோ வேலுமணியை குறிவைப்பதை விட்டுவிட்டு அடுத்த வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டது திமுக.
இந்தத் தேர்தலுக்கு பிரச்சாரத்துக்கு வரும் போது, வேலுமணி மீது நடவடிக்கை என்னாயிற்று என்று கோவை மக்கள் கேட்டால் ஸ்டாலின் அதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை” என்கிறார்கள். கோவையில் திமுக-வின் வெற்றிக்கே சவாலாக இருக்கும் வேலுமணி இப்போது திமுக-வுக்கு வேண்டப்பட்டவராகிவிட்டாரா?” என்றும் சிலர் சந்தேகக் கேள்வி எழுப்புகிறார்கள்.
வேலுமணி மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு திமுக தயங்குகிறதா என கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவியிடம் கேட்டதற்கு, “வேலுமணி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தமிழக அரசு உரிய ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் தண்டனை பெற்று தர தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேசமயம், அவர் இப்போது எம்எல்ஏ-வாக இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் அனுமதி அளிக்க வேண்டும். ஆனால் ஆளுநர் அதற்கான அனுமதியை தராமல் தாமதிப்பதால் தடங்கலாகி நிற்கிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT