Published : 02 Jun 2025 05:53 AM
Last Updated : 02 Jun 2025 05:53 AM

நடிகர் விஜய் என்​னிடம் போனில் பேச​வில்லை - ஆதவ் அர்​ஜுனா​வின் விமர்சனம் குறித்து இபிஎஸ் விளக்கம்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டியளித்த அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி.

கோவை: தேமுதிகவுடன் சுமுகமான உறவு நீடிக்கிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: மதுரையில் நடந்த திமுக பொதுக்குழுக் கூட்டத் தீர்மானத்தில் `துரோக அதிமுக' என்று தெரிவித்துள்ளனர்.

திமுகதான் தமிழகத்துக்கு துரோகம் செய்தது. அதிமுகவைப் பொருத்தவரை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும் சரி, அவர் மறைவுக்குப் பின்னர் நான் முதல்வராக இருந்தபோதும் சரி, சிறப்பான திட்டங்களை மக்களுக்காக கொண்டுவந்தோம். சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது.

கடந்த 4 ஆண்டுகளாக மக்கள் விரோத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தினந்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, வழிப்பறி நடக்கிறது. ஸ்டாலின் மாடல் ஆட்சிதான் துரோக ஆட்சி. மத்திய அமைச்சரவையில் 16 ஆண்டுகாலம் திமுக இடம் பெற்றிருந்தது. அப்போதே கல்வியை மத்திய அரசு பட்டியலில் இருந்து, மாநில அரசு பட்டியலுக்கு கொண்டு வந்திருக்கலாம்.

ஆட்சியில், அதிகாரத்தில் இருந்தபோதெல்லாம் மக்களைப் பற்றியும், மாணவர்களை பற்றியும் கவலைப்படுவதில்லை. ஆட்சி அதிகாரம் இல்லாதபோது வேண்டுமென்றே திட்டமிட்டு மற்றவர்கள் மீது பழி சுமத்துவதுதான் திமுகவின் வாடிக்கை.

நடிகர் விஜய் என்னிடம் போனில் பேசவில்லை. ஆதவ் அர்ஜுனாவின் விமர்சனத்துக்கு அவர் பதில் அளித்துவிட்டார். அத்துடன் அந்தப் பிரச்சினை முடிந்துவிட்டது. தேமுதிகவுடன் சுமுகமான உறவு நீடிக்கிறது. ஏதாவது பேசி குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது. இவ்வாறு பழனிசாமி கூறினார். முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செ.ம.வேலுசாமி, எம்எல்ஏ-க்கள் அம்மன் கே.அர்ச்சுனன், கே.ஆர்.ஜெயராம், பிஆர்ஜி.அருண்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x