Published : 02 Jun 2025 05:41 AM
Last Updated : 02 Jun 2025 05:41 AM
மதுரை: திமுகவில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று மதுரையில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.
மதுரை உத்தங்குடியில் நேற்று நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கொள்கைக்காக தோன்றி, லட்சியத்துக்காக தியாகங்கள் செய்து, மக்களின் ஆதரவைப் பெற்ற அரசியல் இயக்கம் திமுக. அடுத்த ஆண்டு இந்நேரம் 7-வது முறையாக திமுக ஆட்சி அமைத்தது என்ற செய்தி வர வேண்டும்.
அப்போதும் எனக்கு மமதையோ, ஆணவமோ வராது. பணிவுதான் தலைமைப் பண்பின் அடையாளம். வரலாறு காணாத வெற்றியைப் பதிவு செய்வோம் என்று சொல்வது, உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையில்தான். தொண்டர்களால்தான் 75 ஆண்டுகளைக் கடந்து, நூறாண்டை நோக்கி திமுக பயணிக்கிறது.
ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் திமுக மீதுதான் அதிக விமர்சனங்கள் குவியும். ஆனால் தற்போது திமுக ஆட்சிக்கு ஆதரவு அலைதான் வீசுகிறது. இதை மறைக்க, திசை திருப்ப சிலர் கருதுகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியால் அதல பாதாளத்துக்குச் சென்ற தமிழகத்தை மீட்டிருக்கிறோம். ஒன்றிய பாஜக அரசு, நமது உரிமைகளுக்கு எதிராக எத்தனை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், அத்தனையையும் எதிர்த்து போராடி வருகிறோம்.
நியாயமாக ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காமல், பொருளாதார ரீதியாக நம்மை முடக்க நினைத்தாலும், மக்கள் நலத் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி `நம்பர் ஒன்' மாநிலமாக தமிழகத்தை உயர்த்தி இருக்கிறோம்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள்தான் இருக்கின்றன. அதனால், வழக்கத்தைவிட அதிகமாக திமுகவுக்கு எதிராக, ஆட்சிக்கு எதிராக அவதூறு அம்புகளை எதிராளிகள் வீசுவார்கள். இதையெல்லாம் முறியடிக்கத் தயாராக வேண்டும். தமிழக வரலாற்றிலேயே ஒரு கூட்டணி இத்தனை தேர்தல்களுக்கு தொடர்ந்ததாக வரலாறு இல்லை. திமுக கூட்டணியில் சில முரண்கள் இருந்தாலும், விட்டுக்கொடுத்துப் பணியாற்ற வேண்டும். அப்போதுதான் நமது வெற்றிப் பயணத்தை தொடர முடியும்.
எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் பழனிசாமி மீண்டும் பாஜகவிடம் சரணடைந்து விட்டார். சசிகலா இவரை முதல்வராக அறிவித்தபோது எப்படி நடித்தாரோ, அதேபோல இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார். அதமுக கூட்டணியை அமித்ஷாதான் அறிவிக்கிறார். இதில் இருந்தே ஒட்டுமொத்த பாஜகவின் கட்டுப்பாட்டில் அதிமுக சென்று விட்டதை அறியலாம். அதேபோல, தமிழகத்தையும் பாஜக கட்டுப்பாட்டுக்கு கொண்டுசெல்ல பழனிசாமி துடிக்கிறார். அதனால்தான் அடிக்கடி அமித்ஷா இங்கு வருகிறார். எந்த ஷா வந்தாலும், தமிழகத்தை ஆள முடியாது.
பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மதக் கலவரம், சாதிக் கலவரங்களை உண்டாக்குவர். மக்களை பிளவுபடுத்துவார்கள். நம் பிள்ளைகளை படிக்கவிடாமல் பிற்போக்குத்தனங்களில் மூழ்கடிப்பர். தொழில் வளர்ச்சி இருக்காது. இந்தி திணிப்பு, பண்பாட்டுத் திணிப்பு செய்து, தமிழகத்தின் தனித்துவத்தையே அழித்துவிடுவர். அதுமட்டுமல்ல, புதிதாக சிலர் `நாங்கள்தான் மாற்று' என்று இளைஞர்களை ஏமாற்றி வருகிறார்கள். அவர்களுக்கும் பதிலடி தர வேண்டும்.
ரூ.10 லட்சம் நிவாரணம்: திமுக உறுப்பினர்கள் யாராவது சாலை விபத்தில் உயிரிழந்தால், அந்த உறுப்பினரின் குடும்ப வாரிசுகள் 21 வயதுக்கு குறைவாக இருந்தால், கட்சி சார்பில் ரூ. 10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும். அந்தப் பிள்ளைகளின் படிப்பு, குடும்பச் சூழலுக்கு இந்த நிதி உதவும். கட்சியில் புதிதாக 2 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
கட்சியில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும். அப்போதுதான் புதிய ரத்தம் பாயும். இந்த வாரத்திலிருந்து கட்சியினரை தொகுதி வாரியாக சந்திக்க உள்ளேன். திமுகவும், ஸ்டாலினும் இருக்கும்வரை டெல்லி படையெடுப்பால் தமிழகம் ஒருபோதும் வீழ்ந்துவிடாது. இவ்வாறு முதல்வர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT