Published : 02 Jun 2025 04:27 AM
Last Updated : 02 Jun 2025 04:27 AM

மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் இன்பதுரை, தனபால் போட்டி: ஜூன் 4-ல் ஆலோசனைக் கூட்டம்

இன்​பதுரை, தனபால்

சென்னை: மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் அதிமுக வேட்பாளர்களாக முன்னாள் எம்எல்ஏக்கள் இன்பதுரை, தனபால் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (ஜூன் 2) முதல் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது.

மொத்தமுள்ள 6 பதவிகளில் 4 பதவிகளுக்கு திமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, வழக்கறிஞர் வில்சன், எழுத்தாளர் சல்மா, சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சிவலிங்கம், மநீம தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிக்கும் நிகழ்ச்சி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில், துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி வெளியிட்ட அறிவிப்பு:

அதிமுக ஆட்சிமன்றக் குழு ஆலோசித்து எடுத்த முடிவின்படி, பொதுச் செயலாளர் பழனிசாமியின் ஒப்புதலுடன், மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏக்கள் ஐ.எஸ்.இன்பதுரை, ம.தனபால் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக தொடர்கிறது. தேமுதிகவுக்கு அடுத்த ஆண்டு நடைபெறும் மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் ஒரு எம்.பி. பதவி வழங்கப்படும். இவ்வாறு கே.பி.முனுசாமி அறிவித்தார்.

இதையடுத்து, வேட்பாளர்கள் இருவரும், சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள இல்லத்தில், பொதுச் செயலாளர் பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் இன்பதுரை (59), பி.ஏ., பி.எல். பட்டம் பெற்றுள்ளார். இவர் கிறிஸ்தவ நாடார் சமூகத்தை சேர்ந்தவர். 1983-ம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்த இவர் கட்சியின் வடசென்னை வழக்கறிஞர் அணி தலைவர், மாநில சிறுபான்மையினர் நல அணி துணைச் செயலாளர், கட்சி தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார். 2023-ம் ஆண்டு முதல் கட்சியின் வழக்கறிஞர் அணி செயலாளராக உள்ளார். இவர் 2016-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்டு, தற்போது சட்டப்பேரவை தலைவராக உள்ள அப்பாவுவை தோற்கடித்தார். 2021 தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு, அப்பாவுவிடம் தோல்வியடைந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தை சேர்ந்த ம.தனபால் (65), எம்.ஏ., எம்.எல்., எம்பிஏ, பிஹெச்.டி. முடித்துள்ளார். இவர் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர். 1991-96 வரை செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர், காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் பதவிகளை வகித்துள்ளார். தற்போது செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத் தலைவராக உள்ளார்.

1991-96 வரை திருப்போரூர் தொகுதி எம்எல்ஏவாகவும், 2001-2006 வரை காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவராகவும் இருந்துள்ளார். 2006 சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் திருப்போரூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2011-16 வரை மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராக இருந்தார். தற்போது, திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில், 26-வது வார்டு (வாயலூர்) கவுன்சிலராக உள்ளார். இவரது மனைவி காயத்ரி, புதுப்பட்டினம் ஊராட்சிமன்றத் தலைவராக உள்ளார்.

எம்எல்ஏக்கள் கூட்டம்... வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக உரிய அறிவுறுத்தல்களை வழங்குதற்காக வரும் 4-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது. இதில் 2026 தேர்தலுக்கு தயாராவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x