Published : 02 Jun 2025 12:01 AM
Last Updated : 02 Jun 2025 12:01 AM
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளர்களை திமுகவில் உறுப்பினராக சேர்க்கும் வகையில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற புதிய உறுப்பினர் சேர்க்கையை திமுக முன்னெடுக்க வேண்டும் என சிறப்பு தீர்மானத்தை மதுரையில் நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மதுரை உத்தங்குடியில் திமுக பொதுக்குழு கூட்டம் கட்சி தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. பொதுச் செயலாளர் துரைமுருகன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, ஆ.ராசா, திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகளை மதுரை வடக்கு மாவட்ட செயலாளரான அமைச்சர் பி.மூர்த்தி செய்திருந்தார். அவர் வரவேற்று பேசினார். 3,400 பொதுக்குழு உறுப்பினர்கள், 23 சார்பு அமைப்புகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், 4,000 சிறப்பு அழைப்பாளர்கள் உட்பட 8,000 பேர் கலந்து கொண்டனர்.
பொதுக்குழு கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உள்ளிட்ட மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுகவில் மாற்றுத் திறனாளிகள் அணி, ஆசிரியர்கள், பேராசிரியர்கள் கொண்ட கல்வியாளர் அணி என புதிதாக 2 அணிகள் உருவாக்கப்பட்டு, அதற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதை தொடர்ந்து, பொதுக்குழு கூட்டத்தில் 27 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்:
கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதி திமுக சார்பில் செம்மொழி நாளாக கொண்டாடப்படும். அவரது சாதனைகளை போற்றும் வகையில் தமிழகம் முழுவதும் 102 இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
60 ஆண்டுகால பொது வாழ்வில் மக்கள் ஆதரவுடன் தேர்தல்களில் தொடர் வெற்றி நாயகராக திகழும் திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டுகள். 2026 சட்டப்பேரவை தேர்தலில் முழுமையான வெற்றி பெற்று, ஸ்டாலின் தொடர்ந்து முதல்வராக பொறுப்பேற்க அனைவரும் அயராது பாடுபடுவோம். மக்களின் ஆதரவை பெற்றுள்ள இளம் தலைவரான துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பணி தொடர துணை நிற்போம்.
மத்திய பாஜக அரசுக்கு கண்டனம்: ஏழை, எளிய மக்களை வதைக்கும் நகை கடன் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி உடனே நீக்க வேண்டும். விவசாயிகள், மாணவர்கள் உள்ளிட்டோரின் கடன் தொடர்பாக கெடுபிடி நடவடிக்கைகள் மேற்கொள்ள கூடாது.
மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கக்கூடிய வரி வருவாய் பங்கை 41 சதவீதமாக வழங்காமல் 33.16 சதவீதம் மட்டும் வழங்கும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியபடி, மாநிலங்களுக்கான வரி பகிர்வின் பங்கை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
சாதிவாரி கணக்கெடுப்பை விரைவாக, முறையாக நடத்த வேண்டும். தமிழகத்தின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைக்கும் வகையில் மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ள கூடாது. ஆளுநரின் அதிகார வரம்பை வரையறுத்து, மாநில உரிமையை நிலைநாட்டிய உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு காரணமான தலைவர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது.
அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்பு துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை, திமுக ஆட்சியின் முறைகேடுகள்போல சித்தரிக்கும் உள்நோக்கத்துடன் டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அமலாக்க துறை அத்துமீறி சோதனை செய்தது. கீழடி அகழாய்வு முடிவுகளை மறுப்பது மற்றும் சிபிஐ, வருமான வரி துறை போன்ற மத்திய விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது ஆகியவற்றில் மத்திய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.
திமுகவின் உயிர் மூச்சு கொள்கையான மாநில சுயாட்சி முழக்கம் அரை நூற்றாண்டு கடந்த நிலையில் இன்னும் மீட்கப்படாத நிலையில், மாநிலங்களின் மிச்சம் இருக்கும் உரிமைகளையும் மத்திய பாஜக அரசு பறிக்கிறது. தவிர, நாட்டில் மாநிலங்களே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்ற ஆர்எஸ்எஸ் கருத்தியலை செயல்படுத்தவும் பார்க்கிறது. இந்த சூழலில் மாநில சுயாட்சி கருத்தியலுக்கு செயல்வடிவம் கொடுக்க, உயர்நிலை குழுவை நியமித்த தமிழ்நாடு அரசுக்கு பொதுக்குழு பாராட்டு தெரிவிக்கிறது.
2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, அதிமுகவை விரட்டியடித்து, ஆட்சியில் திமுக தொடர்வதற்கு, அனைத்து தொகுதிகளிலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதற்கு, அனைத்து நிலை நிர்வாகிகளும் தேர்தல் பணிகளை விரைவுபடுத்தி அயராது பாடுபட வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
உறுப்பினர் சேர்க்கை தீர்மானம்: பொதுக்குழுவில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்க்கை சிறப்பு தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்தார். அதில் கூறியிருந்ததாவது:
‘எல்லார்க்கும் எல்லாம்’ எனும் திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களில், ஒவ்வொரு வீட்டிலும் ஒருவராவது ஏதேனும் ஒரு திட்டத்தில் பயனாளியாக உள்ளனர். இத்தகைய நல திட்டங்களும், மாநிலத்தின் வளர்ச்சியும் தொடர்வதற்கும், நமது மண், மொழி, மானம் காக்கவும், தமிழகத்தின் அனைத்து குடும்பங்களையும் ஒரு குடையின் கீழ் ஒன்றாய் இணைந்து 2026 சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற புதிய உறுப்பினர் சேர்க்கையை திமுக முன்னெடுக்க வேண்டும். பூத் கமிட்டி மூலம் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளர்களை திமுக உறுப்பினராக சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.
மதுரையில் செல்லூர் நந்தவனம் பகுதியில் கடந்த 1977 மே மாதத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் அதன் தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில்தான் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக பேராசிரியர் அன்பழகனும், பொருளாளராக சாதிக்பாட்சாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்பிறகு 47 ஆண்டுகள் கழித்து மீண்டும் மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT