Published : 01 Jun 2025 07:29 PM
Last Updated : 01 Jun 2025 07:29 PM
மதுரை: திமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த மதுரை ஏன் தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் விளக்கம் அளித்துள்ளார்.
மதுரையில் இன்று (ஜூன் 1) நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளராக திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக பொதுக்குழுவுக்கு மதுரையை தேர்வு செய்யக் காரணம் தமிழகத்தின் தலைநகர் சென்னையாக இருந்தாலும், தமிழ்நாட்டில் கலாச்சார தலைநகரம் மதுரை. இன்றைக்கு தமிழ் கலாச்சாரத்தின் மீது ஒரு அத்துமீறலை பாசிச சக்திகள் செய்து கொண்டிருக்கிறார்கள். மதுரை மக்கள் உணர்ச்சி வசப்படும் மக்கள் மட்டும் அல்ல, வெள்ளந்தியான மக்கள். காலம் எத்தனை கோலம் கொண்டாலும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழாவுக்கு வருகிற கூட்டம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டிருக்கிறது.
பண்பாட்டில், கலாச்சாரத்தில் பற்று கொண்ட மக்கள் வாழும் மதுரை மாநகரில் ஆதிக்கத்தை எதிர்த்து, முடியரசு நிலவிய காலத்தில் ஒரு பெண் கையில் சிலம்பு எடுத்து அரண்மனைக்குள் சென்ற நீதி கேட்டு பாண்டியன் நெடுஞ்செழியன் மறைவுக்கு வித்திட்ட மண். அநியாயம் ஆரவாரத்துடன் வருகிறது. அநியாயத்தை வெட்டி சாய்க்க கண்ணகியின் ஆவேசத்தை பதிவு செய்ய மதுரையில் பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி மெல்ல மெல்ல செத்துக் கொண்டு வருகிறது. அங்கு இளைஞர்களும் இல்லை. மனிதர்களும் இல்லை. விஜய்க்கு இருப்பவர்கள் ரசிகர்கள். அவர்கள் அரசியல் ரீதியாக பக்குப்படவில்லை. திமுகவில் இருப்பவர்கள் அரசியல்ரீதியாக பக்குவப்படுத்தப்பட்டு வருகிறார்கள். இதுவரை 250 பாசறை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. இளைஞர் அணி சார்பில் 234 தொகுதியிலும் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
நாளிதழ் மூலம் வரலாற்றை மீட்டெடுக்கும் பாடத்தை கற்றுக்கொடுத்து வருகிறோம். திமுக இளைஞர்கள் போராளிகளாக, பேராயுதங்களாக மாறுவர். மற்றக் கட்சி இளைஞர்களை திமுக இளைஞர்களுடன் ஒப்பிடக்கூடாது. தேர்தலில் வெற்றிபெற எதை ஆயுதமாக எடுக்க வேண்டும் என்பதை எதிரிகள் தான் தீர்மானிக்கிறார்கள். அதன்படி முதல்வர் ஸ்டாலின் ரோடுஷோ சென்று மக்களை சந்திக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT