Published : 01 Jun 2025 07:05 PM
Last Updated : 01 Jun 2025 07:05 PM
மதுரை: மதுரையில் 2வது நாளாக ரோடு ஷோவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள், கட்சியினரை சந்தித்தார். அப்போது, முதல்வருக்கு மக்கள் கைகெடுத்தும், அவருடன் செல்பி எடுத்துக் கொண்டும் மகிழ்ந்தனர்.
மதுரை அருகே உத்தங்குடியில் திமுகவின் மாநில பொதுக்கூட்டம் இன்று (ஜூன் 1) நடந்தது. இதில் பங்கேற்க தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் நேற்று மதுரை வந்தார். பொதுக்குழுவில் பங்கேற்பதற்கு முன்னதாக நேற்று மாலை மதுரை பெருங்குடி - மதுரை மதுரா கோட்ஸ் மேம்பாலம் வரையிலும் சுமார் 22 கி.மீ ஏற்பாடு செய்திருந்த ரோடு ஷோவில் பங்கேற்றார். அவர் நடந்து சென்றும், வேனில் இருந்தபடியும் பொதுமக்கள், கட்சியினரை சந்தித்தார்.
இந்நிலையில் மதுரை அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்த முதல்வர் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி திமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க காலை 8.30 மணிக்கு மேல் காரில் புறப்பட்டார். வழியில் அவரை கட்சியினர் வரவேற்க விதமாகவும், முதல்வர் பொதுமக்களை சந்திக்கும் வகையிலும் 2-வது நாள் ரோடு ஷோவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்படி, சர்வேயர் காலனி - மேலூர் ரோடு சந்திப்பில் இருந்து பொதுக்குழு நடந்த உத்தங்குடி வரையிலும் சுமார் 5 கி.மீ., தூரம் வரையிலும் மக்கள், கட்சியினர் குவிந்தனர். அவர்களை முதல்வர் சந்தித்தார். அப்போது, சிலரிடம் கோரிக்கை மனுக்களையும் வாங்கினார். ஒருசில இடங்களில் இளைஞர்கள், பெண்கள், கட்சியினர் முதல்வருடன் கை கொடுத்தும், செல்போன்களில் செல்பி, புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டும் மகிழ்ந்தனர். 2வது நாளாக முதல்வரை பார்க்க பொதுமக்கள், கட்சியினர் குவிந்ததால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக கூட்டத்தை கடந்து செல்லும் சூழல் ஏற்பட்டது.
இதன்பின், பொதுக்குழு அரங்கை முதல்வர் அடைந்தார். அரங்கத்தின் முன்பகுதியில் 100 அடி உயரத்தில் ஏற்பாடு செய்திருந்த கம்பத்தில் கட்சி கொடி ஏற்றினார். பிறகு பெரியார், அண்ணா, கலைஞர், முன்னாள் பொதுச்செயலாளர் அன்பழகன் ஆகியோரின் புகைப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தார். இதன் பிறகு பொதுக்குழுவில் பங்கேற்றார். பொதுக்குழு மற்றும் 2வது நாள் ரோடு ஷோவை யொட்டி மதுரை - மேலூர் ரோட்டில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மாநகர காவல் ஆணையர் லோகநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் 1500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
டிஜிட்டலில் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் ஒளிபரப்பு: சென்னை அண்ணா அறிவாலயம் மாடல் போன்று கலைஞர் திடல் என்ற பெயரில் பொதுக்குழு அரங்கம் அமைக்கப்பட்டு இருந்தது. எப்போதுமின்றி மேடையைச் சுற்றிலும் டிஜிட்டல் திரைகளில் திராவிட மாடல் திமுகவின் 4 ஆண்டு சாதனைகள், திட்டங்கள் தொடர்ந்து ஒளி பரப்பப்பட்டது. மேடையிலும், மேடைக்கு முன் பகுதியிலும், பொதுக்குழு உறுப்பினர்களுக்கென ஒதுக்கிய இருக்கைகளிலும் அவரவர் பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது. முதல்வர், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் செல்வதற்கென்று தனித்தனி பாதைகளும் அமைக்கப்பட்டது போன்ற பிரமாண்டமாக பொதுக்குழு அரங்கம் காட்சி அளித்தது.
24 வகை அசைவ, சைவ உணவுகள்: இப்பொதுக்குழுவில் அரங்கத்திற்குள் பங்கேற்ற அனைவருக்கும் 24 வகைகளைக் கொண்ட அசைவ, சைவ உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒரே நேரத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமர்ந்து உணவருந்தும் விதமாக டேபிள், சேர்கள் அமைக்கப்பட்டது. பொதுக்குழு முடிந்து அனைவரும் அசைவ, சைவ விருந்து சாப்பிட்டுவிட்டு சென்றனர். திருப்பூர், மேலூர் பகுதியைச் சேர்ந்த சமையல் கலைஞர்கள் நேற்று இரவு முதலே உணவு வகைகள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT