Last Updated : 01 Jun, 2025 06:49 PM

23  

Published : 01 Jun 2025 06:49 PM
Last Updated : 01 Jun 2025 06:49 PM

‘ஒன்றிய அரசு என்று கூறுவது பிரிவினைவாத திணிப்பு’ - சி.பி.ராதாகிருஷ்ணன்

கோவை: “ஒன்றிய அரசு என்று கூறுவதே தவறு. அப்போ மாநிலத்தில் இருப்பது பஞ்சாயத்து அரசா?. வேண்டுமென்றே பிரிவினைவாதத்தை திணிக்கின்றனர்.” என மகாராஷ்ட்ரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தீவிரவாதம் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும். அப்போதுதான் தேசம் வளர்ச்சி பெறும். அமைதி நிலவும். மத்திய அரசு அளித்து வரும் உதவியை பாராட்டுவதற்கு சிலருக்கு மனம் வருவதில்லை. மத்திய அரசோடு இணைந்து செயல்படுவது தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு உதவும். தமிழக ஆளுநர் மிக நேர்மையானவர். அவருக்கு தமிழக அரசு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

டாஸ்மாக் பிரச்சினை அதிகமாக உள்ளது. அதை விட கஞ்சா அதிகமாகி பரவிக் கொண்டிருக்கிறது. எனவே தமிழக அரசு முதலில் கஞ்சாவை ஒழிப்பதற்குரிய நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளில் வேறுபாடு காணப்படுகிறது. கேரளாவை பொறுத்தவரை கேரளா ஆளுநருக்கு மட்டும் தான் துணைவேந்தர்களை நியமிக்கும் முழுமையான அதிகாரம் உள்ளதாக கூறியுள்ளது. தற்போது அதற்கு மாறாக தீர்ப்பு வந்துள்ளது.

ஒன்றிய அரசு என்று கூறுவதே முதலில் தவறு. மத்திய அரசு என்று தான் கூற வேண்டும். அப்போ மாநிலத்தில் இருப்பது பஞ்சாயத்து அரசா. வேண்டுமென்றே பிரிவினைவாதத்தை திணிக்கின்றனர்.

கமல் குறித்து ஒரு ஆளுநர் பதில் கூற வேண்டிய அவசியம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. திமுக-வை ஒழிப்பது தான் என்னுடைய பணி என்று இயக்கத்தை தொடங்கினார். இன்று திமுக-வுடன் இருப்பது தான் தமிழகத்திற்கு நன்மை தரும் என கூறுகிறார்.

சம்ஸ்கிருதத்தில் இருந்து தான் தமிழ் பிறந்துள்ளது என யாராவது கூறினால் நாம் ஏற்றுக் கொள்வோமா. பேசும் போது அதிக நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு செயல்படும் திறன் கொண்டவர்களே பொது வாழ்க்கைக்கு தகுதியானவர்கள்.

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x