Published : 01 Jun 2025 09:35 AM
Last Updated : 01 Jun 2025 09:35 AM
நெல்லை, பொதிகை அதிவேக ரயில்களில் தலா ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் நீக்கப்பட்டு, 3-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. இந்த மாற்றம் ஆக.1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் முக்கிய ரயில்களாக நெல்லை, பொதிகை அதி விரைவு ரயில்கள் உள்ளன. நெல்லை அதி விரைவு ரயில் தினசரி இரு மார்க்கமாக, சென்னை எழும்பூர் திருநெல்வேலி இடையே இயக்கப்படுகிறது. இதுபோல, சென்னை எழும்பூர் - செங்கோட்டை இடையே பொதிகை விரைவு ரயில் இயக்கப்படுகிறது.
இந்த இரண்டு ரயில்களுக்கும் பயணிகளிடம் மிகப்பெரிய தேவை இருப்பதால், பெட்டிகளில் இடங்கள் எப்போதும் நிரம்பி காணப்படும். அதிக வருவாயை கொட்டித்தரும் இந்த ரயில்களில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட ஒரு பெட்டி நீக்கப்பட்டு, மூன்றடுக்கு ஏசி பெட்டி ஒன்று இணைக்கப்பட உள்ளது. இருமார்க்கமாகவும் மாற்றம் செய்யப்பட உள்ளது.
திருநெல்வேலியில் இருந்து புறப்படும் ரயிலில் (12632) ஆக.1ம் தேதி முதலும், சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயிலில் (12631) ஆக.4ம் தேதி முதலும் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதன் மூலமாக, மூன்றடுக்கு ஏசி பெட்டிகள் எண்ணிக்கை 5-ல் இருந்து 6 ஆக அதிகரிக்க உள்ளது. இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் எண்ணிக்கை 8-ல் இருந்து 7 ஆக குறைக்கப்பட உள்ளது.
சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு தினசரி இயக்கப்படும் அதிவேக ரயிலில் (12661) வரும் ஆக.2ம் தேதி முதல் 2ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக மூன்றடுக்கு ஏசி பெட்டி ஒன்று இணைக்கப்பட உள்ளது. மறுமார்க்கமாக, செங்கோட்டையில் இருந்து ஆக.3-ம் தேதி முதல் புறப்படும் பொதிகை ரயிலில் (12662) இதேபோல மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இத்தகவல் ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT