Published : 01 Jun 2025 12:26 AM
Last Updated : 01 Jun 2025 12:26 AM
துணை முதல்வராக்குவதாகத் தெரிவித்து, அதிமுக கூட்டணிக்கு தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அழைத்ததாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தவெக கல்வி விருது விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி, விழாவுக்கான முன்னேற்பாடுகளை தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கடந்த 29-ம் தேதி ஆய்வு செய்தனர்.
அப்போது “2024 மக்களவைத் தேர்தலில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை 10 பேரை வைத்துக்கொண்டு, 20 சதவீத வாக்கு வாங்கியிருக்கிறார். ஆனால், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை நம்பி யாரும் கூட்டணி வைக்க முன்வரவில்லை.” என்று பொதுச் செயலாளர் ஆனந்திடம், ஆதவ் அர்ஜுனா பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
சென்னையில் மறைந்த நடிகர் ராஜேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் நேற்று சீமான் கூறியதாவது: ஆதவ் அர்ஜுனா புரளி பேசுவதற்கெல்லாம் நான் கருத்துச் சொல்ல முடியுமா? இதே ஆதவ் அர்ஜுனாதான் என்னை அதிமுக கூட்டணிக்கு வருமாறும், துணை முதல்வர் ஆக்குவதாகவும் கூறினார். அதற்கெல்லாம் என்ன செய்யமுடியும்?
அதேபோல, பொழுதுபோக்கு வரியை குறைப்பதால் திரைத் துறையினருக்கு என்ன நன்மை? தற்போது ஒரு குடும்ப நிறுவனம்தான் அனைத்து படங்களையும் வாங்கி விநியோகம் செய்கிறது. அவர்கள் நினைக்கும் படம்தான் திரையரங்குகளில் வெளியாகிறது. எனில், இந்த பொழுதுபோக்கு வரியை யாருக்காக குறைக்கின்றனர்? இவ்வாறு சீமான் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT