Published : 01 Jun 2025 12:14 AM
Last Updated : 01 Jun 2025 12:14 AM
அனைத்து துறைகளை சேர்ந்தவர்களும் திமுக அரசு மீது கோபத்தில் உள்ளனர். 2026 சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சி மாற்றம் நடக்கும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில். சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நடந்த கூட்டத்தில் மாவட்ட, மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.. கூட்டத்துக்கு பின்னர், செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது:
வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையில் மகத்தான கூட்டணி அமையும். தற்போதைய சூழலில் திமுகவுக்கு எதிர்மறை வாக்குகள் அதிகரித்து வருகிறது. இதனால், கண்டிப்பாக சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சி மாற்றம் நடக்கும். ஆட்சி மாற்றம் வேண்டும் என நினைக்கும், ஒருமித்த கருத்துடைய கட்சிகள் ஒரே அணியாக திரள வேண்டும்.
தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் என அனைத்து துறையை சேர்ந்தவர்களும் தங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என திமுக அரசு மீது கோபத்தில் உள்ளனர். இந்த கோபம் தேர்தலில் எதிரொலிக்கும்.
அரக்கோணம் மாணவியின் பாலியல் புகாரில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய போலீஸார் ஏன் தயங்குகின்றனர். வியாசர்பாடி தீ விபத்தின்போது, பொதுமக்களுக்கு உதவிய தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் நிர்வாகிகளை போலீஸார் தாக்கியுள்ளனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நீட் தேர்வு தொடர்பாக சரியான அறிவுரைகளை மாணவர்களுக்கு வழங்கி உள்ளார். பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கருத்து கூற விரும்பவில்லை. தேமுதிகவுக்கு மாநிலங்களவை இடம் வழங்க வேண்டியது குறித்து அதிமுகதான் முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT