Published : 01 Jun 2025 12:10 AM
Last Updated : 01 Jun 2025 12:10 AM
சென்னை: தமிழக அரசு பணியில் நேற்று ஒரேநாளில் மட்டும் 8,144 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியில் இருந்து ஓய்வுபெற்றனர்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் ஏறத்தாழ 9 லட்சத்து 50 ஆயிரம் ஊழியர்கள் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வருகின்றனர். முன்பு தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 ஆக இருந்தது.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஓய்வு வயது 58-லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது. அந்த வகையில் 60 வயதை எட்டிய ஊழியர்கள் பணியில் இருந்து ஓய்வுபெறுவர். இந்நிலையில், நேற்று (மே 31)ஒரேநாளில் மாநிலம் முழுவதும் 8,144 ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள் ஓய்வுபெற்றனர். அவர்களில் குரூப் அதிகாரிகள் 424 பேர். குருப்-பி அலுவலர்கள் 4,399 பேர். குருப்-சி பணியாளர்கள் 2,185 பேர். குருப்-டிபணியாளர்கள் 1,136 பேர். தலைமைச் செயலகத்தில் மட்டும் 30 அலுவலர்கள் நேற்று ஓய்வு பெற்றனர்.
தமிழக அரசு பணியில் நேரடி குருப் ஏ பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி குருப்-1 தேர்வு வாயிலாகவும், குருப்-பி பணியிடங்கள் ஒருங்கிணைந்த குருப்-2, மற்றும் குருப்-2 தேர்வு மூலமாகவும், குருப்-சி பணியிடங்கள் ஒருங்கிணைந்த குருப்-4 தேர்வு வாயிலாகவும் நிரப்பப்படுகின்றன. அதேபோல், அரசு கல்லூரி உதவி பேராசிரியர், அரசு பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர், சிறப்பாசிரியர், வட்டார கல்வி அலுவலர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக நிரப்பப்படுகின்றன.
அவுட்-சோர்சிங்: அந்த வகையில் ஓய்வுபெற்றவர்களால் ஏற்படும் காலியிடங்கள் பதவிகளின் நிலைக்கேற்ப டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி மற்றும் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் ஆகியவை மூலமாக நிரப்பப்படும். மாநில அரசின் பல்வேறு துறைகளில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் இருப்பதாகவும் அவற்றை உடனடியாகநிரப்ப வேண்டும் என்றும் அரசு ஊழியர் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. குருப்-டி காலிப் பணியிடங்களை வெளிமுகமை (அவுட்-சோர்சிங்) முறையில் நிரப்பப்பட்டு வருவதாக அரசு ஊழியர் சங்கங்கள் தமிழக அரசு மீது குற்றம்சாட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT