Published : 31 May 2025 09:06 PM
Last Updated : 31 May 2025 09:06 PM
மதுரை: மதுரையில் அண்ணா அறிவாலய முகப்புடன் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட அரங்கில் திமுக பொதுக்குழு நாளை (ஜூன் 1) கூடுகிறது. பொதுக்குழுவுக்கு வருபவர்களுக்கு சைவ, அசைவ உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் நாளை (ஜூன் 1) நடைபெறுகிறது. இதற்காக மதுரை உத்தங்குடியில் கலைஞர் திடலில் சென்னை அண்ணா அறிவாலயம் போல் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அரங்கின் முன்பு செயற்கை புல்வெளிக்கு மத்தியில் நூறு அடி உயர கொடிக் கம்பம், அண்ணா, கருணாநிதி, அன்பழகன் சிலைகளும், ஸ்டாலின், உதயநிதி கட்-அவுட்களும் அமைக்கப்பட்டுள்ளன.
கலைஞர் அரங்கில் ஒரே நேரத்தில் நூறு பேர் அமரும் வகையில் டிஜிட்டல் மேடை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 8 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன் மற்றும் திமுக மாநில நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.
பொதுக்குழுவுக்கு தமிழகம், கர்நாடகம், கேரளா, ஆந்திரா, புதுச்சேரி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 4500 பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சுமார் 3 ஆயிரம் சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அழைப்பிதழுடன் வருபவர்கள் பொதுக்குழு அரங்கில் அமைக்கப்பட்டுள்ள 76 கட்சி மாவட்ட கவுண்டர்களில் தங்கள் மாவட்ட கவுண்டர்களுக்குச் சென்று அங்குள்ள நிர்வாகிகளிடம் அழைப்பிதழைக் காண்பித்து பொதுக்குழுவுக்கான தனி அடையாள அட்டையைப் பெற வேண்டும்.
அந்த அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே பொதுக்குழு அரங்கினுள் அனுமதிக்கப்படுவர். பொதுக்குழுவுக்கு வருபவர்களுக்கு அரசின் சாதனைகள் அச்சிடப்பட்ட புத்தகம், தண்ணீர் பாட்டில், ஸ்நாக்ஸ், குளிர்பானம் கொண்ட தனி பேக் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் காலை 9.30 மணிக்குள் அரங்கினுள் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பொதுக்குழுவுக்கு வருபவர்களுக்கு சைவ, அசைவ உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் தனி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
சைவம், அசைவத்தில் தலா 21 வகையான உணவுகள் வழங்கப்படுகிறது. அசைவத்தில் ஆடு ஈரல், தலைக்கறி, மூளை, நாட்டு கோழி, மீன், நண்டு, இறால் போன்ற உணவு வகைகளும், சைவத்தில் குல்கந்து பர்பி, பனங்கற்கண்டு மைசூர்பா, கதம்ப பொரியல், சைவ சிக்கன் வறுவல், சைவ மீன் பிரை, ஜெய் பிரியாணி, சாதம், சாம்பார், சப்பாத்தி உள்ளிட்ட உணவு வகைகளும் வழங்கப்படுகிறது. அசைவ உணவுகளை மேலூரை சேர்ந்த சமையல் கலைஞர்களும், சைவ உணவுகளை திருப்பூர் சமையல் கலைஞர்களும் தயார் செய்கின்றனர்.
பொதுக்குழு குறித்து திமுகவினர் கூறுகையில், “மதுரையில் 48 ஆண்டுக்கு முன்பு திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. அதன்பிறகு தற்போது நடைபெறுகிறது. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மதுரையில் நடைபெறும் பொதுக்குழுக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மத்திய அரசு நிதி தராமல் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. தமிழக ஆளுநர் மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு தன் பங்குக்கு அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்.
இருப்பினும் ஆட்சிக்கு வந்து 4 ஆண்டு காலத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு மாநில சுயாட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேறப்படும். கட்சியின் முக்கிய பொறுப்புகளின் மாற்றம் ஏற்படவும், கட்சிக்கு இளைஞர்கள், பெண்களை அதிகளவில் ஈர்க்கும் வகையில் புதிய அறிவிப்புகள் வரவாய்ப்புள்ளது. மொத்தத்தில் மதுரை பொதுக்குழு 2026 தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கமாக அமையும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT