Published : 31 May 2025 07:52 PM
Last Updated : 31 May 2025 07:52 PM
திருநெல்வேலி: “சிறப்புக் கட்டணங்கள் என்ற பெயரில், பொருளாதார தீண்டாமையை இந்து கோயில்களில் திணிப்பது சாபக்கேடு. பக்தர்கள் எத்தனை கோடி காணிக்கைகளை அள்ளி கொடுத்தாலும் இந்துசமய அறநிலையத்துறைக்கு திருப்தி ஏற்படவில்லை. கோயிலை காட்சி பொருளாக்கி பக்தர்களிடம் சுரண்டி, கஜானாவை நிரப்பவே திட்டம் தீட்டப்படுகிறது” என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்ட இந்து முன்னணி பொறுப்பாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “எல்லாருக்கும் எல்லாம் என்பது திராவிட மாடலின் வெற்று கோஷமாக இருக்கிறது.
மதுரையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வு மீனாட்சி திருக்கல்யாணம். இதனை தரிசனம் செய்ய தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டணம் வசூலித்துள்ளது. கோயில்களின் விசேஷ நாட்களில் விஐபி தரிசனம், கட்டணங்கள் ரத்து செய்யப்படும் என சட்டப் பேரவையில் அமைச்சர் சமீபத்தில் அறிவித்திருந்தார். அதற்கு மாறாக மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண தரிசனதுக்கு கட்டணம் நிர்ணயித்தது சந்தர்ப்பவாதமாகும்.
இறைவன் முன்னால் ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி, பாமர மக்களை இறைபக்தியில் இருந்து விலக்கி வைக்கும் சதியாகவே இதை கருதுகிறோம். ஏழை எளிய சாமானிய மக்கள் மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை அருகில் இருந்து காண முடியாதா? பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே பக்தியை வியாபாரம் செய்வதா? இத்தகைய பொருளாதார தீண்டாமையை இந்து கோயில்களில் திணிப்பது சாபக்கேடு.
பக்தர்கள் எத்தனை கோடி காணிக்கைகளை அள்ளி கொடுத்தாலும் இந்து சமய அறநிலையத்துறைக்கு திருப்தி ஏற்படவில்லை. கோயிலை காட்சி பொருளாக்கி, பக்தர்களிடம் சுரண்டி, கஜானாவை நிரப்பவே திட்டம் தீட்டப்படுகிறது. இந்த அவலத்தை எதிர்த்து இந்து முன்னணி தொடர்ந்து போராடி வருகிறது. தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மீனாட்சி திருக்கல்யாண வைபவத்துக்கு இந்துசமய அறநிலையத்துறை தரிசன கட்டணம் நிர்ணயித்த விவகாரத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இனிவரும் காலங்களில், அனைத்து பக்தர்களும் பொருளாதார வேறுபாடின்றி மீனாட்சி அன்னையின் திருக்கல்யாணத்தைக் கண்டு வழிபடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில் ஆனி தேரோட்டத்துக்கு முன்னதாக ரதவீதி சாலைகளை சீரமைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும்” என்று அவர் கூறினார். இந்த சந்திப்பின்போது, இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராஜேஷ், மாநில செயலர் குற்றாலநாதன், கோட்ட செயலர்கள் பிரம்மநாயகம், ஆறுமுகசாமி உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT