Published : 31 May 2025 04:49 PM
Last Updated : 31 May 2025 04:49 PM
சென்னை: தங்க நகைக் கடன் பெற புதிய விதிமுறைகளை உடனே திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்க நகைக் கடன் பெற புதிய விதிமுறைகளை உடனே திரும்பப்பெற வலியுறுத்தி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சி தலைவர் தி.வேல்முருகன் உள்பட பல்வேறு மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் புதிய விதிமுறை ரத்து செய்க; பெருநிறுவனங்களுக்கு துணை போகாதே; ஏழை, நடுத்தர மக்களின் வயிற்றில் அடிக்காதே என்பது உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் நிருபர்களிடம் அக்கட்சி தலைவர் வேல்முருகன் கூறியதாவது: பன்நெடும்காலமாக, பொதுமக்கள் தங்கள் அவசர தேவைக்காக தேசிய வங்கிகளிலும், அரசு வங்கிகளிலும் நகை கடன் பெறுவது வழக்கமாக இருந்து வந்தது. இந்நிலையில் பிரதமர் மோடி அரசு கடந்த வாரம், நகை கடன் வாங்குவதை குறைத்து, சில நிபந்தனைகளை விதித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது. இதை திரும்பப் பெற தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தி, ரிசர்வ் வங்கியை முற்றுகையிடுவோம் என்று அறிவித்திருந்தோம். இதற்கிடையில், மத்திய அரசு அவற்றில் சில மாற்றங்களை செய்து அறிவித்துள்ளது.
இது ஏற்புடையது அல்ல. முற்றிலும் இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி ரத்து செய்ய வேண்டும் வலியுறுத்துகிறோம். 22 காரட் தங்க நகைகளும், 24 காரட் தங்க நகைகளும் அடகுக்கு ஏற்றுகொள்ளப்படும் என்றும், ஒவ்வொரு விவசாயிகளும், பொதுமக்களும் தங்கள் நகைகளை அடகு வைக்க வேண்டும் என்றால் வாங்கியதற்கான ரசீது இருக்க வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது போன்ற எண்ணற்ற நிபந்தனைகளை விதித்து, நகையை அடகு வைத்து குறிப்பிட்ட காலத்துக்குள் மீட்க வேண்டும், இல்லை என்றால் அந்தநகைகளை அரசே எடுக்கும் அபாயம் உள்ளது. மேலும், மக்களின் நகைகள் தனியார் நிதி நிறுவனங்களுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. புதிய நிபந்தனையுடன் அறிவிக்கப்பட்டதை முழுமையாக ரத்து செய்யும் வரை தமிழக மக்களும், இந்திய மக்களும் போராட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT